Opportunity Rover: முடிந்தது சகாப்தம்.. ரோவரை தாக்கிய செவ்வாய் புயல்.. விடைபெறும் ஆப்பர்ச்சுனிட்டி!
செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் மொத்தமாக செயலிழந்து இருக்கிறது.
Recommended Video
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் மொத்தமாக செயலிழந்து இருக்கிறது. இதனுடைய செயல்பாடு முடிந்துவிட்டதாக இன்று நாசா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு பெரிய சகாப்தம் முடிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். மனித குலம் நிகழ்த்திய அசாத்திய சாதனை ஒன்று, தற்போது இயற்கை காரணமாக முடிவிற்கு வந்துவிட்டது. சூப்பர் மேன் vs பேட் மேன் படத்தில் எப்படி, ''சூப்பர் மேன் இஸ் டெட்'' என்று செய்தி தாள்களில் செய்திகள் வருமோ, அப்படித்தான் ''ஆப்பர்ச்சுனிட்டி இஸ் டெட்'' என்று தற்போது அமெரிக்க செய்தி சேனல்களில் ஒளிபரப்பி வருகிறார்கள்.
ஆம், அமெரிக்கா அனுப்பிய ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் மொத்தமாக செயலிழந்து உள்ளது. செவ்வாய் கிரகத்தின் புயல் காரணமாக இதன் தொடர்பு மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக அனுப்பினார்கள்
2003 ஜூன் மாதம் அனுப்பப்பட்டு, 2004 ஜனவரி மாதம் ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. இது மனித வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது. அதன்பின் 3 வாரம் கழித்து இந்த ரோவர் தனது பணிகளை தொடங்கியது. அப்போதில் இருந்து 14 வருடங்கள் மிக தீவிரமாக இந்த ரோவர் உழைத்தது.
மக்கள் கொண்டாட்டம்
இந்த வெற்றியை மக்கள் அந்த ரோவர் தரையிறங்கிய போதே பெரிய அளவில் கொண்டாடினார்கள். 2004லிலேயே நாசா இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தியது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்தது. இதை அடுத்து செவ்வாயை ஆராய வரிசையாக ரோவர்களை உருவாக்கியது நாசா. மற்ற நாடுகளும் இந்த முயற்சியில் இறங்கியது.
ஏன் அனுப்பினார்கள்
செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்பதை பார்க்கவே இந்த ரோவரை அனுப்பினார்கள். இதன் ஆயுட்காலம் அப்போது 90 நாட்கள் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் 90 நாட்களில், செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை எல்லாம் திரட்டி, நாசாவிற்கு அந்த ரோவர் அனுப்பியது.
ஆனால் ஆச்சர்யம்
ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக இந்த ரோவர் தொடர்ந்து இயங்க தொடங்கியது. சூரிய ஒளியில் இது சார்ஜ் ஏற்றி இயங்க கூடியது என்பதால், தொடர்ந்து தனது ஆராய்ச்சிகளை செய்து வந்தது. இதனால் 90 நாட்கள் திட்டமிடப்பட்ட இது வெற்றிகரமாக 14 ஆண்டுகள் கடந்து சாதித்தது. செவ்வாயில் இதுவரை இது 45 கிமீ தூரம் வரை சென்று இருக்கிறது.
புயலில் தங்கியது
இந்த ரோவர் இவ்வளவு நாட்களாக எல்லா செவ்வாய் கிரக புயலிலும் தாக்குப்பிடித்தது. இது அனுப்பும் புகைப்படங்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புயல் காரணமாக இதற்குமுன் ஒருமுறை கூட ரோவர் செயலிழந்தது கிடையாது.
மோசம்
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் மோசமான புயல் ஒன்று அங்கு வீசியது. செவ்வாய் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய புழுதிப் புயல் இது என்று கூறப்படுகிறது. செவ்வாய் கிரக புயல் காரணமாக இந்த ரோவர் மொத்தமாக செயலிழந்தது. செவ்வாய் கிரகம் அடிக்கடி புயல் அடிக்க கூடிய கிரகம் என்பதால் அதற்கு ஏற்றார் போலத்தான் வடிவமைக்கப்பட்டது.
மிக கடினம்
இந்த நிலையில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு செவ்வாய் கிரகத்தில் பெரிய புயல் வீசியுள்ளது. செவ்வாயின் முக்கால் பகுதியை இந்த புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் அந்த ரோவர் காணாமல் போனது. இந்த புயல் காரணமாக ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சரியாக புயல் வீச தொடங்கி சில நிமிடத்தில் இது நடந்தது.
படம் பிடித்தது
புயல் கொஞ்சம் கொஞ்சமாக ரோவரை நெருங்கி வரும் போது, அதை ரோவர் படம் பிடித்துள்ளது. ஆனால் கடைசி புகைப்படத்திற்கு பின் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரோவர் இயங்காமல் இருந்தது. ரோவர் சூரிய ஒளியை வைத்து இயங்க கூடியது. புயல் காரணமாக இந்த ரோவருக்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை.
இதுதான் காரணம்
அந்த அளவிற்கு செவ்வாயை புயல் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே ரோவருக்கு சூரிய ஒளி கிடைக்காமல் போனது. இதனால் சார்ஜ் இல்லாமல் அந்த ரோவர் அணைந்து போய் இருக்கிறது. அதன்பின் இதனுடன் நாசா ஒருமுறை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனுடைய ஒரே ஒரு பாகம் மட்டும் இடையில் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டது.
எல்லாம் போனது
இதனுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்பு கொள்ள கடுமையாக முயன்றார்கள். ஆனால் அந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக இது தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. இதையடுத்து நேற்று இதை கடைசியாக தொடர்பு கொள்ள முயன்றார்கள். நேற்று இரவு இந்த முயற்சி நடந்தது.
இன்று அறிவிப்பு
ஆனால் நேற்றும் இதை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள். இதனுடைய செயல்பாடு முடிந்துவிட்டதாக இன்று நாசா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அதன்படி விண்வெளி துறையில் சகாப்தமாக பார்க்கப்படும் ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் 14 வருடங்களுக்கு பின் தன்னுடைய செயல்பாட்டை மொத்தமாக நிறுத்த போகிறது.