ராணுவ தாக்குதலா? முதலில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துங்க.. பாக்.கிற்கு அமெரிக்கா நெருக்கடி!
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை நிறுத்திவிட்டு, தீவிரவாதிகளை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நியூயார்க்: பாகிஸ்தான் இந்தியா மீதான ராணுவ தாக்குதலை நிறுத்திவிட்டு, தீவிரவாதிகளை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மீது நேற்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக ஆசியாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை குறித்து அமெரிக்க அரசு சார்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உறவு
அதில், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை அறிந்ததும் இந்தியாவின் வெளியுறவுத்துறையுடன் போனில் பேசினோம். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இதுகுறித்து பேசினோம். இரண்டு நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இன்னும் வலுவாக ஒற்றுமையாக உள்ளது. ஒன்றாக இணைந்து ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேசினோம்.
பாகிஸ்தான் என்ன
அதேபோல் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியிடமும் நாங்கள் பேசினோம். ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் உடனடியாக கைவிட வேண்டும்.
இதில் கவனம்
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அமைப்புகள்தான் இரண்டு நாட்டு உறவை பாதிக்கிறது.
இனி என்ன
இரண்டு நாடுகளும் இனி மேல் தாக்குதல் நடத்தாமல் இருக்க முயல வேண்டும். ராணுவ நடவடிக்கையை விட்டுவிட்டு அமைதி ஏற்படுவதற்கான செயல்பாடுகளில் இரண்டு நாடுகளும் இறங்க வேண்டும். நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாடுகளும் முயல வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.