கொலம்பியா பல்கலை. தலித் திரைப்பட கலாச்சார திருவிழா.. திரையிடப்படும் காலா, பரியேறும் பெருமாள்!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும், முதலாவது, 'தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019' சினிமா ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிலில் வெளியான, 'காலா', 'பரியேறும் பெருமாள்', திரைப்படங்களும் 'கக்கூஸ்' ஆவணப்படமும் இந்த கலாச்சார திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
'தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019' அடுத்த மாதம் (பிப்ரவரி), 23 மற்றும் 24ம் தேதிகளில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி, டாக்குமெண்டரிகளும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
பரியேறும் பெருமாள், காலா
தமிழ் மொழியிலிருந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருசேர வரவேற்பை பெற்ற 'பரியேறும் பெருமாள்' இந்த கலாச்சார திருவிழாவில் இடம் பெற உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' தமிழில் இருந்து திரையிடப்பட உள்ள மற்றொரு திரைப்படமாகும். திவ்ய பாரதி இயக்கத்தில் வெளியான 'கக்கூஸ்' தமிழ் ஆவணப்படமும் இங்கு திரையிடப்பட உள்ளது.
கவுரவிக்கப்படும் பா.ரஞ்சித்
இந்த கலாச்சார திருவிழாவில், பா.ரஞ்சித், மராத்தி திரைப்பட இயக்குநர் நாக்ராஜ் மன்ஜுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் கவுரவிக்கப்படுகிறார்கள். மலையாளத்திலிருந்து 'பபிலியோ புத்தா' (Papilio Buddha) திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 'மாசான்', 'பேண்ட்ரி', 'போலே இந்தியா ஜெய் பீம்' ஆகிய திரைப்படங்களும் இடம் பிடித்துள்ளன.
அம்பேத்கருக்கான தொடர்பு
'வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை', 'தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்' உள்ளிட்ட மேலும் பல டாக்குமென்ட்ரிகளும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுதான் முதலாவது ஆண்டு, 'தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா' ஆகும். திரைப்படங்களில் தலித் விவகாரம் கையளப்பட்ட விதத்தை கொண்டு இங்கு திரையிடப்படும் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில்தான் சட்ட மேதை அம்பேத்கர், 1927ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றார். 1952ம் ஆண்டு, அம்பேத்கருக்கு இப்பல்கலைக்கழகம், கவுரவ பட்டம் வழங்கியிருந்தது.
கவுரவத்திற்கான காரணம்
காலா திரைப்படத்தை பொறுத்தளவில், தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஜாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள், அப்படியே முன் வைக்கப்பட்டன. பலரும் அறிந்திராத உள்ளூர் சார்ந்த ஜாதிய பாகுபாடு கண்ணோட்டம், இத்திரைப்படத்தில் பட்டவர்த்தனமாக காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், இத்திரைப்படங்களுக்கு, 'தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019' கவுரவம் வழங்கியுள்ளது.