"நதியே அடி நைல் நதியே.. நனைந்தேன் உன் அழகினிலே.." இந்தப் போட்டோவை பார்த்தா நாமளும் பிரபுதேவா தான்!
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நைல் நதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: நாசா வெளியிட்டுள்ள விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நைல் நதியின் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்துள்ளது.
உலகின் மிக நீளமான நதி என்றால் அது நைல் நதி தான். தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது நைல் நதி.
பொதுவாக எந்த ஒரு நாகரீகமும் ஆற்றங்கரையில் தான் தோன்றியிருக்கிறது. அந்த வகையில் நைல் நதியின் நாகரீகமும்,வரலாறும் மிகவும் தொன்மையானவை.
வாடிகனில் திரும்பும் இயல்புநிலை.. முதன்முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் கூட்டுப் பிரார்த்தனை!
நைல் நதிக் கரை
எகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது நைல் நதியே ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் யாவும் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன.
புகைப்படம்
இத்தனை பெருமைவாய்ந்த நைல் நதியின் டெல்டா பகுதிகளை மிக துல்லியமாக விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா. அதன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் கிரிஸ் காசிடி, தனது சமூகவலைதளப் பக்கத்தில் நைல் நதியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
தண்ணீர் தான் வாழ்க்கை
"தண்ணீர் தான் வாழ்க்கை. இந்த இரவு நேர நைல் நதியைவிட அதற்கு சாட்சி இந்த பூமியில் வேறெதுவும் இருக்க முடியாது", என வர்ணித்து இந்த புகைப்படங்களை கிரிஸ் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு விளக்குகள் ஒளிர பிரகாசமாக காட்சியளிக்கிறது நைல் நதி.
நதியே நைல் நதியே...
இந்தப் புகைப்படத்தைப் பார்க்கையில் "நதியே அடி நைல் நதியே.. நனைந்தேன் உன் அழகினிலே.." என கௌசல்யாவை பார்த்து பிரபுதேவா பாடும் வானத்தை போல படப் பாடல் மனதில் ரீங்காரமிடுவதை தவிர்க்க முடியவில்லை.