'நட்பு நாடுகளை எந்தவொரு நிலையிலும் கைவிடமாட்டோம்.. ஆனால்..' சீனாவை மறைமுகமாக சாடிய அதிபர் பைடன்
நியூயார்க்: அமைதியைப் பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எந்தவொரு நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
ஐ.நா சபையின் 76ஆவது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இதில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமைதியைப் பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
இணைந்து பணியாற்றத் தயார்
இன்று ஐநா சபையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "மற்ற நாடுகளுடன் கடுமையான கருத்து வேறுபாடு இருக்கும் போதிலும், சர்வதேச சிக்கல்களைத் தீர்க்கவும் அமைதியான நிலையை உண்டாக்கவும் எந்தவொரு நாட்டுடனும் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது. கொரோனா வைரஸ். பருவநிலை மாற்றம், சைபர் குற்றங்கள் எனச் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகளை உலகம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. இவற்றை அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து எதிர்த்துப் போராட வேண்டும். காலநிலை மாற்றத்தை சமாளிக்கச் செலவிடப்படும் தொகையை அமெரிக்கா இரட்டிப்பாக்கும். மேலும் சர்வதேச அளவில் உணவுப் பஞ்சத்தை நீக்க 10 பில்லியின் டாலரை அமெரிக்கா செலவழிக்கும்" என்றும் அவர் கூறினார்.
பனிப்போரை விரும்பவில்லை
அதிபர் பைடன் தனது உரையில் எந்தவொரு இடத்திலும் "சீனா" அல்லது "பெய்ஜிங்" என்ற வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை. அதேநேரம் வர்த்தக மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளில் இரு நாடுகளும் நேர் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில், அதிபர் பைடனின் பேச்சில் பல்வேறு இடங்களிலும் சீனாவை மறைமுகமாகத் தாக்கும் வகையிலேயே இருந்தது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளை என்றும் கைவிடாது என்று குறிப்பிட்ட பைடன், அமெரிக்கா மீண்டும் ஒரு பனிப்போரை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆதரவாக இருப்போம்
அதிபர் பைடன் மேலும் பேசுகையில், "நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். பலவீனமான நாடுகள் மீது வலிமையான நாடுகள் ஆதிக்கம் செலுத்த முயன்றால் அந்த முயற்சிகளைக் கண்டிப்பாக எதிர்ப்போம். ராணுவம், பொருளாதார சுரண்டல், தொழில்நுட்ப சுரண்டல், போலி செய்திகளைப் பரப்புவது என எந்த முறையைப் பயன்படுத்தி வலிமையான நாடுகள் பயன்படுத்தினாலும் அவர்களை எதிர்ப்போம். ஆனால், நாம் மறுபடியும் சொல்கிறேன். நாங்கள் ஒரு புதிய பனிப்போரை விரும்பவில்லை" என்றார்.
ஆப்கன் விவகாரம்
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற்ற பைடனின் முடிவு அவர் மீதான அதிருப்தியைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆப்கன் விவகாரம் குறித்து பைடன் பேசுகையில், "ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த மோதலை நாம் முடித்துள்ளோம். இடைவிடாத போர் முடிக்கப்பட்டு, ராஜதந்திர உறவு முறை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய நலன்களில் ஒரு போதும் சமரசம் என்றே பேச்சுக்கே இடமில்லை. ஆனால் அதன் இலக்குகள் தெளிவாகவும் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் உலகெங்கிலும் நாம் காணும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமெரிக்க ராணுவம் பயன்படுத்தப்படக்கூடாது. அமெரிக்காவின் ராணுவம் என்பது முதல் ஆயுதம் இல்லை. அது தான் கடைசிக் கட்ட ஆயுதம்.
சர்வதேச பிரச்சினைகள்
ஈரானுடனான அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். மேலும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு உரியப் பாதுகாப்பை வழங்குவோம். ஆனால் பாலஸ்தீனியர்கள் உடனான தீர்வு தேவை என்றாலும் அது தொலைதூர இலக்கு என்பதில் மாற்று கருத்தில்லை. வடகொரியாவின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைச் சுற்றியுள்ள நெருக்கடியையும் அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புகிறது" என்றார்.
இரட்டை கோபுர தாக்குதல்
தொடர்ந்து இரட்டை கோபுர தாக்குதல் குறித்துப் பேசிய பைடன், "அனைத்து நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தின் குணம் எங்களுக்குத் தெரியும். கடந்த மாதம், காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை நாங்கள் மறக்க மாட்டோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு 9/11 அன்று தாக்குதல் நடத்தப்பட்ட போது இருந்த அமெரிக்கா இப்போது இல்லை. இன்று நாம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்க சிறந்த முறையில் தயாராக இருக்கிறோம்" என்று அவர் பேசினார்.