தாலிபான் மூலம் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல்.. ரஷ்ய உளவுப்படையின் ஷாக் பிளான்.. வெளியான உண்மை!
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படை வீரர்களை கொல்வதற்காக ரஷ்யா அங்கிருக்கும் தாலிபான்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
10 வருடத்திற்கும் மேலாக தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போர் நடத்தி வருகிறது. அமெரிக்கா ஒரு நாடு மீது படைகளை குவித்து அங்கு தாக்குதலை நடத்தியதிலேயே ஆப்கானிஸ்தான் தாக்குதல்தான் மிக நீண்டதாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான் படைகள் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை செய்ய முயன்றது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த பேச்சுவார்த்தை எதுவும் வெற்றிகரமாக நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்
நடந்தது என்ன
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படை வீரர்களை கொல்வதற்காக ரஷ்யா அங்கிருக்கும் தாலிபான்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு துறையை சேர்ந்த உளவு அதிகாரிகள் சிலர் அமெரிக்கா ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி ரஷ்யாவின் உளவுப்படை மூலம் அமெரிக்க வீரர்களுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பணம் கொடுத்தனர்
ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்காவின் படைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறி தாலிபான்களுக்கு ரஷ்யா பணம் கொடுத்துள்ளது. அமெரிக்காவுடன் இருக்கும் வேறு சில நாட்டின் படைகளுக்கு எதிராகவும் தாலிபான்கள் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ரஷ்யா உத்தரவிட்டு உள்ளது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரஷ்யா இந்த மோசமான திட்டங்களை தனது உளவுத்துறை மூலம் செய்து வந்தது என்று கூறுகிறார்கள்.
எத்தனை மரணமும்
ரஷ்யாவின் மாஸ்டர் மைன்ட் மூலம் ஆபகானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அமெரிக்க வீரர்கள் இந்த தாக்குதலில் 20 பேர் பலியானதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் ஆபகானிஸ்தானில் அமெரிக்க படைகள் மீது தாலிபான் படைகள் 10 முறை தாக்குதல் நடத்தி உள்ளது என்று கூறுகிறார்கள்.
ரஷ்யா பின்னணி
இந்த தாக்குதலுக்கு பின் ரஷ்யாவின் நிதி உதவிதான் காரணமாக இருக்கும் என்று அமெரிக்கா பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகிறார்கள்.ஆனால் அமெரிக்க பாதுகாப்பு படை இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. வெள்ளை மாளிகையும் இது தொடார்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இது தொடர்பாக அதிபர் டிரம்பிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யா மறுப்பு
இந்த புகார் முழுக்க முழுக்க தவறானது. ரஷ்யா அமெரிக்காவிற்கு எதிராக செயல்படவில்லை. அதேபோல் தாலிபான்களுக்கு நாங்கள் நிதி கொடுக்கவும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இரண்டு நாடுகள் இடையே சில வருடங்களாகத்தான் அமைதி நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய புகார் இரண்டு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.