4 வருடம் உரிமையாளர் கூடவே கல்லூரிக்குச் சென்று வந்த நாய்.. கவுரவப் பட்டம் வழங்கிய பல்கலைகழகம்!
உரிமையாளர் கல்வி கற்க உதவிய நாய்க்கு கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்று.
நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பட்டம் வாங்க உதவிய நாயை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பட்டம் வழங்கியுள்ளது பல்கலைக்கழகம்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே என்ற கல்லூரி மாணவி. மாற்றுத்திறனாளியான இவர், எப்போதும் வீல் சேரில் தான் அமர்ந்திருப்பார். இதனால், அவரது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.
இதனால், ஹவுலே கோல்டன் ரெட்ரிவர் வகையைச் சேர்ந்த கிரிப்பின் என்ற நாயை வளர்த்தார். தனக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதற்குப் பழக்கினார் அவர். இதனால் எப்போதும் அது ஹவுலே உடனே வலம் வந்தது.
நியூயார்க்கில் உள்ள போஸ்ட் டாம் என்ற பல்கலையில் பட்டம் படிக்க சென்றார் ஹவுலே. கல்லூரிக்கு அவர் சென்ற முதல்நாள் முதல் கிரிப்பினும் அவருடனேயே அங்கு சென்றுள்ளது. ஹவுலேவுக்குத் தேவையான பொருட்களை எடுத்துத் தருவது, கதவுகளைத் திறந்து விடுவது என தன்னால் ஆன எல்லா உதவிகளையும் கடந்த நான்கு ஆண்டுகளாக அது செய்து வந்துள்ளது.
கிரிப்பியின் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பல்கலை நிர்வாகம் கவனித்து வந்துள்ளது. தனது உரிமையாளருக்கு அது செய்யும் உதவிகளைக் கண்டு ஆச்சர்யப்பட்ட நிர்வாகம், கிரிப்பினை கவுரவிக்க முடிவு செய்தது.
அதன்படி, ஹவுலே பட்டம் பெற்ற போது, அதே பட்டமளிப்பு விழாவில் கிரிப்பினுக்கும் கவுரவ டிப்ளமோ பட்டம் வழங்கியது. ஹவுலே பட்டம் பெற கிராப்பினும் முக்கியக் காரணம் என்பதால், இந்த கவுரவப் பட்டத்தை அதற்கு வழங்கியிருப்பதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாய் ஒன்றிற்கு கவுரவப் பட்டம் வழங்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது வைரலாகியுள்ளது.