அமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு!!
நியூயார்க்: அமெரிக்காவின் அலபாமா உள்பட ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடா மாநிலத்தின் மியாமியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்துதான் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, டென்னஸ்ஸி, அலாஸ்கா, மிசெளரி, இடாஹோ, அலபாமா ஆகிய மாநிலங்களில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெக்சாஸில் புதிய உச்சமாக கொரோனா தொற்று பரவி, மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று எண்ணிக்கை 55,405 ஆக இருந்தது. இது நேற்று வெள்ளிக்கிழமை 53,483 ஆக குறைந்தது.
இன்று அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் சந்திப்பு இன்று அதிகரிக்கும் என்பதால், கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி அமெரிக்கா சுதந்திரமடைந்தது.
வடக்கு கரோலினாவில் மட்டும் நேற்று 951 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,099 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாள் என்பதால் கொரோனா எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நாங்க இருக்கோம் மோடி" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு
அமெரிக்காவில் பரிசோதனை அதிகரித்து வரும் நிலையில், இறப்பு குறைந்து வருகிறது. இதற்குக் காரணம், பரிசோதனையில் பாசிட்டிவ் என்று அறியப்பட்ட உடன் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களில் 37 மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. ஃபுளோரிடா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 9,488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவே அந்த மாநிலத்தில் வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் 10,109 ஆக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் தினமும் பதிவாகும் கொரோனா எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஃபுளோரிடாவில் பாசிடிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4% ஆக இருந்தது. இது தற்போது 16% ஆக அதிகரித்துள்ளது. 5% அதிகமாக இருந்தாலே, கவலை அளிக்கக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரைக்கும் 28,90,588 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,32,101 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 12,35,488 பேர் மீண்டு வந்துள்ளனர். 15, 22,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்து லட்சம் பேரில் 1,09,653 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, இதுவரை மொத்தம் 3,62,97,195 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.