அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு.. 20 பேர் பலி.. 48 பேர் படுகாயம்!
நியுயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் சமீப காலங்களில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அந்நாட்டு அதிபர் டிரம்ப் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற புகார் வைக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இந்த கலாச்சாரம் அதிகம் ஆகியுள்ளது. அதன் ஒருபடியாக இன்று 21 வயதே நிரம்பிய இளைஞர் ஒருவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.
அப்போது அந்த அங்காடிக்குள் மொத்தம் 3000 பேர் வரை இருந்துள்ளனர். உள்ளே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த அந்த இளைஞர், வேகமாக சரமாரியாக மக்களை நோக்கி சுட்டு இருக்கிறான். ஆனால் அந்த கடைக்கு அருகிலேயே போலீஸ் நிலையம் இருந்துள்ளது.
இதனால் போலீஸ் படை உடனே அங்கு விரைந்து வந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் இருந்ததால், பலர் ஒருவர் மீது ஒருவர் மோதி, நெரிசலில் சிக்கி பெரிய களேபரமே அந்த கடைக்குள் ஏற்பட்டுள்ளது. இளைஞர் நடத்திய இந்த மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 20 பேர் பலியானார்கள்.
அதேபோல் இதில் மொத்தமாக 48 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சூட்டை மூன்று பேர் நடத்தி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது ஒருவர்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபரை தற்போது போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். துப்பாக்கி சூட்டை நடத்தியவரின் பெயர் பேட்ரிக் க்ருஷியஸ் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடந்த இடம் மெக்சிகோ மக்களும், ஸ்பானிஷ் மக்களும் அதிகம் இருக்கும் இடம் ஆகும். அமெரிக்காவில் அவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேட்ரிக் எழுதிய கடிதம் போலீசால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடிதத்தில் மெக்சிகோ மக்களுக்கு எதிராக அவர் வெறுப்பை உமிழும் வகையில் எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வருத்தம், இரங்கல் தெரிவித்துள்ளார். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.