ரூ.11 கோடி கொடுத்து... அமானுஷ்யங்கள் நிறைந்த ‘நிஜ கான்ஜூரிங் வீட்டை வாங்கிய நபர்!
நிஜ கான்ஜூரிங் வீடு எனக் குறிப்பிடப்படும் அமெரிக்க பண்ணை வீட்டை ரூ. 11 கோடிக்கு ஒருவர் வாங்கியுள்ளார்.
அமெரிக்காவின் மிக பிரபலமான பேய் வீடு என்று அழைக்கப்படும் பழைய பண்ணை வீடு ஒன்று 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
நியூயார்க்: தி கான்ஜூரிங் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான, அமானுஷ்யங்கள் நிறைந்த அமெரிக்காவின் பண்ணை வீட்டை, இந்திய மதிப்பில் ரூ. 11 கோடியே 63 லட்சத்திற்கு ஒருவர் வாங்கி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழ் சினிமா மட்டுமில்லை, ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிப் படங்களிலுமே பேய்ப்படங்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். மக்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்து, நகம் கடிக்க வைக்கும் திக் திக் படங்கள் வசூலில் சாதனை படைக்க தவறுவதில்லை. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான், 2013ம் ஆண்டு வெளியான தி கான்ஜூரிங் படமும். புது வீட்டிற்கு செல்லும் குடும்பம் ஒன்று, அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் அப்படத்தின் கதை.
இலங்கை நெருக்கடி: 1 லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம் - பிரதமர் ரணில் தகவல்
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களை தழுவியே அப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, தி கான்ஜூரிங் படத்தைப் போலவே, சம்பந்தப்பட்ட அந்த பண்ணை வீடும் உலகம் முழுவதும் பிரபலமானது.
அமானுஷ்ய வீடு
286 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பண்ணை வீடு, 3100 சதுர அடியில் மொத்தம் மூன்று படுக்கையறைகளைக் கொண்டது. தி கான்ஜூரிங் படத்தைப் போலவே, இந்த வீட்டின் கதையும் மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. 1971- 1980 க்கு இடையில் இந்த வீட்டில் வசித்த ஆண்ட்ரியா பெரோன் என்பவர், தனது குடும்பம் அங்கு தங்கி இருந்தபோது, பல அமானுஷ்ய சம்பவங்களை நேரில் பார்த்ததாக அளித்த பேட்டி அளித்துள்ளார்.
திக் திக் சம்பவங்கள்
அதில், "ஒருமுறை வயதான எனது தாய், நாற்காலியில் இருந்து 20 அடி தூரம் தூக்கியெறியப்பட்டதை நான் நேரில் பார்த்துள்ளென். வயது மூப்பின் காரணமாக அவருக்கு அந்த சம்பவம் குறித்து ஞாபகம் இல்லை. இந்த விஷயத்தை அறிந்த அமானுஷ்ய ஆர்வலர் ஒருவர் இந்த வீட்டிற்கு வந்தபோது அவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று தாக்கியது" என பெரோன் கூறியுள்ளார்.
புலனாய்வாளர்கள் ஆர்வம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரது கைக்கு இந்த வீடு கைமாறியுள்ளது. பெரும்பாலும் இந்த வீட்டின் கதையைப் பற்றி நன்கு தெரிந்த அமானுஷ்ய சம்பவங்களில் ஆர்வமுள்ளவர்களேஇந்த வீட்டை வாங்கியுள்ளனர். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு அமானுஷ்ய புலனாய்வாளர்களான ஜென் மற்றும் கோரி ஹெய்ன்சன் ஆகியோர் இந்த வீட்டை 4,39,000 டாலர்களுக்கு வாங்கினர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
இரண்டு ஆண்டுகளில், அதாவது கடந்தாண்டு செப்டம்பரில் இந்த வீட்டை விற்பனை செய்ய இருப்பதாக அவர்கள் அறிவித்தனர். அப்போதிருந்தே அடுத்து இந்த வீட்டை யார் வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வீட்டை ரியல் எஸ்டேட் அதிபரான ஜாக்குலின் நுனேஸ் என்பவர் வாங்கி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தங்க அனுமதியில்லை
1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து, இந்த திகில் வீட்டை ஜாக்குலின் வாங்கியிருக்கிறார். இந்திய மதிப்பில் இது ரூ. 11 கோடியே 63லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து நூற்றி இருபத்தைந்து ஆகும். இந்த வீட்டை விற்பனை செய்யும்போதே, இதனை வாங்குபவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி இதில் வசிக்கக்கூடாது, வணிக நடவடிக்கைகளுக்கு தேவைப்படுபவர்கள் மட்டுமே தங்களை அணுகலாம் என்ற நிபந்தனை விதித்திருந்தனர் ஜென் மற்றும் கோரி.
அனைத்திற்கும் சம்மதம்
மேலும் இந்த வீட்டை வாங்குபவர்கள் தங்களது அமானுஷ்ய ஆய்வுகளை அங்குத் தொடர்ந்து நடைபெறத் தடை விதிக்கக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவித்தே ஜாக்குலின் இந்த வீட்டை வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பணம் கொடுத்து இந்த வீட்டை ஜாக்குலின் வாங்கியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி சாதக மற்றும் பாதகமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.