'நாங்கள் விரும்புவது அமைதி.. ஏற்ற சூழலை பாகிஸ்தானே உருவாக்க வேண்டும்'.. ஐநாவில் இந்தியா திட்டவட்டம்
நியூயார்க்: பாகிஸ்தான் நாட்டுடன் அமைதியான உறவையே விரும்புவதாகவும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழித்து இரு நாடுகளுக்கும் இடையே உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளதாகவும் ஐநா சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவின் ஆண்டு அறிக்கை குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியா தூதர் ஆர். மது சூடான் பங்கேற்றார்.
அப்போது தான் பாகிஸ்தான் நாட்டுடன் அமைதியான வழக்கமான அண்டை நாட்டு உறவையே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அமைதியான சூழ்நிலை
இது குறித்து ஆர். மது சூடான் கூறுகையில், "பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளுடனும் வழக்கமான மற்றும் அமைதியான ஒரு அண்டை நாட்டு உறவையே இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் பிரச்சினைகளை இருதரப்பும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும். பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு இடம் தரக்கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது " என்றார்.
காஷ்மீர் விவகாரம்
முன்னதாக பேசிய ஐ.நா.வின் பாகிஸ்தான் தூதர் பிரதிநிதி முனீர் அக்ரம் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை ஐநாவில் எழுப்பினார். தனது பேச்சில் இதற்குப் பதிலடி கொடுத்த மது சூடான், "பாகிஸ்தான் தொடர்ந்து பொருந்தாத நாடகங்களில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது என்பது முற்றிலுமாக எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சர்வதேச நாடுகள் இனியும் இந்த விவகாரத்தில் ஏமாறாது" என்றார்.
விவாதங்கள்
பாதுகாப்பு கவுன்சில் அறிக்கைகள் குறித்த ஐநா சபையில் இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த கோரிக்கையை பாதுகாப்பு கவுன்சில் முறையாகக் கவனிக்கவில்லை என்றும் அதன் செயல்பாடுகள் ஒருமித்த முடிவெடுக்கும் கொள்கையை மையமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் முதன்மைக் கருவியான ஐ.நா அமைதி காக்கும் ஆப்ரேசன்கள் (UN peacekeeping operations) குறித்தும் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நாடுகள் - அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. இது போக 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா தற்போது தற்காலிக உறுப்பினராக உள்ளது. நீண்ட காலமாகவே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.