உங்களால் தாங்க முடியாது.. சீனாவிற்கு எதிராக 2 சட்டங்களை இயற்றிய டிரம்ப்.. மோதிக்கொள்ளும் வல்லரசுகள்!
ஹாங்காங் பிரச்சனை காரணமாக சீனாவிற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு முக்கிய சட்டங்களை இயற்றி இருக்கிறார்.
நியூயார்க்: ஹாங்காங் பிரச்சனை காரணமாக சீனாவிற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு முக்கிய சட்டங்களை இயற்றி இருக்கிறார். இதனால் சீனா அமெரிக்கா இடையிலான கடுமையான பிரச்சனை எழுந்துள்ளது.
சீனாவின் அதிகாரத்திற்கு ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதமே வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வருவது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹாங்காங் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயன்று கொண்டு இருக்கிறது. சீனாவில் புதிதாக கொண்டு வரப்பட்ட நாடுகடத்தல் சட்டத்திற்கு எதிராக அங்கு மக்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
இந்த ஹாங்காங் போராட்டத்தை அமெரிக்கா மிக தீவிரமாக கவனித்து வந்தது. ஹாங்காங்கில் அரசியல் சூழ்நிலை சரியில்லை. அங்கு மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. அங்கு மனித உரிமை மீறல்கள் செய்யப்படுகிறது. இதற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று கூறி வந்தது.
இரண்டு சட்டம்
இந்த நிலையில் நேற்றும் நேற்று முதல்நாளும் அமெரிக்காவில் மேலவை மற்றும் கீழ் அவையில் இரண்டு முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டும் சீனாவிற்கு எதிரான சட்டம் ஆகும்.
என்ன மீறல்
அதன்படி ஹாங்காங்கில் மனித உரிமை மீறல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், அவர்களுக்கு உலக நாடுகள் தடை விதிக்கும் வகையிலும் சட்டம் இயற்றப்பட்டது. இன்னொரு பக்கம் சீனா, ஹாங்காங் அதிகாரிகளுக்கு கண்ணீர் புகை குண்டு, லத்தி உள்ளிட்ட போலீஸ் தொடர்பான சாதனங்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறல் தடை
சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் அமெரிக்கா இப்படி செய்துள்ளது. ஆனால் இதை கடுமையாக எதிர்த்து இருக்கிறது. அமெரிக்கா இப்படி செய்யும் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் செய்தது சர்வதேச விதி மீறல். எங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் அவர்கள் தலையிட கூடாது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
விரைவில் நடவடிக்கை
விரைவில் அமெரிக்காவிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் நடவடிக்கை எடுத்தால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று சீனா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஒரு வருடம்
கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா சீனா இடையில் வர்த்தக போர் நடந்து வந்தது. அது கடந்த இரண்டு வாரம் முன் சரியாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் திடீர் என்று தற்போது இரண்டு நாடுகள் இடையில் புதிய பிரச்சனை தலை தூக்கி உள்ளது.