ஏவுகணைகள்.. வெடிகுண்டுகள்.. சவுதிக்கு படையை அனுப்பிய அமெரிக்கா.. ஈரானை தாக்க திட்டம்?
அமெரிக்கா சார்பாக எண்ணெய் வள நாடுகளுக்கு தற்போது ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்கா சார்பாக எண்ணெய் வள நாடுகளுக்கு தற்போது ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் முதற்கட்டமாக அமெரிக்கா தனது போர் படையையும் அனுப்பி உள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 2015ல் தான் ஈரான் அமெரிக்கா இடையே பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது.
ஈரானுடன் செய்திருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை, வெள்ளை மாளிகையில் அமர்ந்து கொண்டு கருப்பு மை மூலம் ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அந்த கருப்பு மை ஏற்படுத்திய சுவடுகள்தான் தற்போது எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு!
அணு ஆயுத ஒப்பந்தம்
அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் மட்டுமே ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க விடாமல் அமெரிக்கா தடுத்து வந்தது. உலக நாடுகள் பல பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஈரான் இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உலக நாடுகளுக்கு இடையில் போர் பதற்றத்தை உண்டாக்கியது.
பொருளாதார தடை
இதையடுத்து முதற்கட்டமாக சென்ற வருடம் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது. அதன்படி ஈரானிடம் இருந்து யாரும் எண்ணெய் பொருட்கள் வாங்க கூடாது என்று கூறியது. அதன்பின் இரண்டாவது பொருளாதார தடையாக ஈரானிடம் இருந்து பெட்ரோலியம் கெமிக்கல்கள் வாங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. கடந்த வாரம் ஈரானிடம் இருந்து ஸ்டீல், இரும்பு, காப்பர் பொருட்கள் வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது.
ஈரான் என்ன செய்கிறது
இந்த நிலையில் எண்ணெய் வள நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் பயமுறுத்தியது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது.
என்ன தாக்குதல்
இந்த நிலையில் நேற்று ஹோர்முஸ் ஜலசந்தியில் சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு சவுதியின் எண்ணெய் கப்பல்கள், ஒரு அமீரகத்தின் எண்ணெய் கப்பல், ஒரு தனியார் நிறுவன கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதை ஈரான்தான் செய்து இருக்கிறது என்று, அமெரிக்கா நேரடியாக குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
படைகளை அனுப்பியது
இதையடுத்து அதன் ஒரு கட்டமாக தற்போது சவுதிக்கும், அரபு அமீரகத்திற்கும் அமெரிக்கா தனது போர் படையை அனுப்பி உள்ளது. ஈரானுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிறிய ராக்கெட்டுகள், முதற்கட்ட போர் படை, ஹெலிகாப்டர்கள், வெடிகுண்டுகள் முதற்கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் எல்லையில் சவுதி, அமீரகத்தில் இந்த ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளது.
திட்டமா?
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குழு ஒன்று இதற்காக ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளது. ஈரானுக்கு எதிராக அனைத்து மத்திய கிழக்கு நாடுகளையும் ஒருங்கிணைக்க, அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.