அலறும் அமெரிக்கா.. அடுத்தடுத்து உயிர்பலி.. எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்பின் அலட்சியம், பிடிவாதம்!
டிரம்ப்பின் செயல்பாடுகள்தான் பலி உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்
நியூயார்க்: கொரோனா வைரஸ் என்ற அரக்கனின் பிடியில் அமெரிக்கா வசமாக சிக்கி கொண்டுள்ளது... அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்துக் கொண்டே போவதால் பெரும் திணறலுக்குள்ளாகியுள்ளது டிரம்ப் அரசு.
Recommended Video
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்நாட்டில் கொரோனாவைரஸுக்கு 1,480 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகப் பெரிய உச்சகட்ட அளவாகும். இதுவரை எந்த ஒரு நாட்டிலும் இந்த அளவுக்கு அதிக அளவிலான மரணங்கள் ஒரே நாளில் ஏற்பட்டதில்லை என்பதால் இந்த மரண எண்ணிக்கை அமெரிக்க அரசை நிலைகுலைய வைத்துள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவில் வந்த கொரோனா மெல்ல மெல்ல ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் ஊடுருவி வருகிறது.. இப்போது வரை உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இதன் பலி எண்ணிக்கையே உலக மக்களை தினம் தினம் கிலியில் ஆழ்த்தி வருகிறது... இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காததும், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் பலமாகி கொண்டே போவதாலும்தான் இந்த உயிரிழப்புகளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932 பேர் மரணம்
வல்லரசு
சீனாவுக்கு அடுத்தபடியாக வல்லரசு நாடான அமெரிக்கா தான், அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இப்போதைக்கு உள்ளது. ஆனால் தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால் அமெரிக்காதான் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளான நாடாக மாறி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,77,161 ஆக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு 1,480 பேர் பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
உயிரிழப்பு
இதற்கு என்ன காரணம்... வல்லரசு நாட்டுக்கே இந்த கதியா? ஏன் கொரோனாவை அமெரிக்கா சமாளிக்க முடியவில்லை? ஏன் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை உலகம் அதிர்ச்சியுடன் கவனிக்கிறது! இதற்கு முதல் காரணம் அதிபர் டிரம்ப்-ன் தவறான அரசியல் முடிவுகள்... சீனாவுக்கு அடுத்து நாம்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை தெரிந்தும் டிரம்ப்பின் அலட்சியம்தான் முதல் காரணமாக, மூல காரணமாக இப்போதுவரை சொல்லப்படுகிறது.
விமான போக்குவரத்து
காரணம் இதுவரை தேசிய அளவிலான ஊரடங்கை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே லாக்டவுன் அமலில் உள்ளது. விமானப் போக்குவரத்தும் கூட முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்கப்படவில்லை . சோசியல் டிஸ்டன்சிங் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. கடும் பாதிப்பை சந்தித்து வந்த ஐரோப்பிய நாடுகளைப் பார்த்தாவது டிரம்ப் நிர்வாகம் சுதாரித்திருக்க வேண்டும்.
பிடிவாதம்
தவறை உணராததுடன் பிடிவாத குணத்தைதான் டிரம்ப் அதிகமாக வெளிப்படுத்தினார்.. இந்த பிடிவாத குணம்தான் அரசு அதிகாரிகளையும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடாமல் தடுத்தது.. நாங்க எல்லாரும் நல்லாதான் இருக்கோம்.. சீனாவில் இருந்த வந்தவருக்குதான் கொரோனா என்று கெத்து காட்டவும் செய்தாரே தவிர போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. துணிந்து கேள்வி கேட்கும் அதிகாரிகளும், நிலைமையை விளக்கி சொல்லும் விஷயம் தெரிந்தவர்களையும் டிரம்ப் மதிக்கவே இல்லை.
எச்சரிக்கை
அப்படிப்பட்டவர்கள் சொன்னாலும் காதில் வாங்கி கொள்ளவும் இல்லை.. முழுக்க முழுக்க பொருளாதாரம் சார்ந்த நலன்தான் அவர் கண்ணில் பட்டதே தவிர, செத்து மடியும் மக்கள் இல்லை! அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் கூடிய சீக்கிரம் திறக்கப்படும் என்றும் அறிவித்தார்.. அப்போதுகூட பொருளாதார நிபுணர்கள் வேண்டாம் என்றுதான் எச்சரித்தனர்!
வென்ட்டிலேட்டர்கள்
இந்த வைரஸை பொறுத்தவரை பாதிப்பு ஏற்படும்போது, ஆஸ்பத்திரிகளில் வென்ட்டிலேட்டர்கள்தான் ரொம்பவும் முக்கியம்.. அதன் தேவைதான் பெருகும்.. ஆனால் மார்ச் 15ம்தேதி வாக்கில் வெறும் 12,700 வென்ட்டிலேட்டர்கள் கையில் வைத்திருந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாக செய்திகள் வந்தன.. இதை பார்த்ததும் வென்ட்டிலேட்டர்கள் இருக்கின்றன என்று துணை அதிபர் தகவலை சொன்னாரே தவிர, எண்ணிக்கையை அவர் சொல்லவில்லை.
தம்பட்டம்
இந்த சமயத்தில்தான் வென்ட்டிலேட்டர்கள் விவகாரத்தில் பல மாநில ஆளுநர்களுடன் டிரம்ப்-க்கு கருத்து வேறுபாடு வந்து சீறி பாய்ந்தார்... இன்னொரு பக்கம் நம்மிடம் நிறைய மருத்துவ உபகரணங்கள் உள்ளன.. அவைகளை ஸ்பெயின், இத்தாலிக்கு கூட அனுப்ப முடியும் என்று தம்பட்டம் அடித்தார்.. இப்படியே பேசி கொண்டிருந்த அதே வேளையில்தான் மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர்.
அலட்சியம்
மிகக் குறைந்த அளவிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன... தேவையான மாஸ்க்குகள்கூட அரசிடம் இல்லை. ஆரம்பத்திலேயே சுதாரிக்காமல், அதிபர் காட்டிய அலட்சியம் தான் தொற்று மிக வேகமாக பரவ காரணம்.. அலட்சியத்தைக் கைவிட்டு துரித கதியில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட அதிபர் டிரம்ப் முன்வர வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் ட்விட்டரிலும் கருத்து பதிவிட்டனர்.. இதுவும் வெள்ளை மாளிகையை எட்டவில்லை.
வல்லமை
சகல வல்லமை படைத்த நாடு என்று கூறப்படும் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு எல்லாம் கொரோனா பாதிப்பிற்காக பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அள்ளி தந்ததை குறை சொல்வதற்கில்லை.. அதே சமயம், தன்நாட்டில் அதிரடிகளை காட்டாமல் விட்டுவிட்டதே என்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை.. முன்கூட்டியே தடை உத்தரவையும் போடாமல், சமூக விலகல் குறித்த நடவடிக்கையும் கடுமையாக்காமல், போதிய மருத்துவ உபகரணங்களையும் சப்ளை செய்யாமல், கொரோனா எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்ற அதிபரின் மனப்பான்மைதான் இந்த விபரீத நிலைக்கு காரணமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போதாவது தவறை உணர்கிறாரா என தெரியவில்லை.. ஆனால் அநியாயமாக பல உயிர்கள் பறி போனதற்கு டிரம்பின் நிர்வாக கோளாறுதான் காரணம் என்பதை மட்டும் மறுக்கவே முடியாது!