சீனாவே பணிந்து விட்டது.. இந்தியாதானே.. டிரம்பின் ஆக்சன் பிளான் ரெடி.. இன்று என்ன செய்வார் மோடி?
இந்தியா - அமெரிக்கா இடையில் வர்த்தக போர் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை அதிக கவனம் பெற்றுள்ளது.
நியூயார்க்: இந்தியா - அமெரிக்கா இடையில் வர்த்தக போர் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த வருகையால் நிறைய பொருளாதார மாற்றங்கள் வரும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபராகும் முன் வரி விதிப்பு முறைகளுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தார். தன்னுடைய டிரம்ப் டவருக்கு முதல் பத்து வருடங்கள் வரி விலக்கு வாங்கியவர்தான் டிரம்ப். அப்போதே டிரம்பிற்கு வரி என்றால் ஆகாது.
அதேபோல் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான்.
என்ன புகார் வைக்கிறார்
உலகில் இருக்கும் மற்ற நாடுகள் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீதான வரியை குறைத்துவிடும். ஆனால் சீனா வரியை குறைக்க கொஞ்சம் கூட தயாராக இல்லை. இதை அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இதனால் சீனாவின் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா வைத்து வந்தது. சீனா எங்களை ஏமாற்றுகிறது, அதிக வரி விதிக்கிறது என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.
சண்டை வந்தது
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது.
இப்போதுதான் சரியானது
இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அதோடு இரண்டு நாடுகளிலும் மற்ற நாடுகளின் பொருட்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் மறுக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சனை இருந்தது. தற்போதுதான் இது சரியாகி உள்ளது.
எப்படி சரியானது
இதை சரி செய்வதற்காக நான்கு கட்டமாக இதற்கு எதிராக பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியாக ஜனவரி தொடக்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை இந்த வர்த்தக போரை முடிவிற்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கைமாறாக சீனாவின் பொருட்கள் மீது அமெரிக்கா தனது வரியை குறைக்கும். இதன் மூலம் இரண்டு நாடுகளின் சண்டை முடிந்துள்ளது.
ஒரே தீர்வு
அதாவது அமெரிக்காவிடம் இருந்து மொத்தமாக பல பில்லியன் டாலர் பொருளை வாங்குவதே இந்த சண்டையை தீர்க்க ஒரே வழி ஆகும் . இதேபோல்தான் இந்தியா அமெரிக்கா இடையில் கடந்த சில மாதங்களாக வர்த்தக ரீதியான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக இந்தியா மீது அமெரிக்கா வரிசையாக நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறது. இந்தியாவின் வர்த்தக கொள்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டித்து வருகிறார்.
என்ன முடியுமா
அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக மோதல் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியாவும் இருந்தது. இந்த பட்டியலில் இருந்துதான் இந்தியாவை கடந்த வருடம் டிரம்ப் நீக்கினார். இந்தியாவின் வரி விதிப்பு முறையை கண்டித்து இப்படி செய்துள்ளார். இதனால் இந்தியாவிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
சண்டை வந்தது
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் அறிவிக்கப்படாத சண்டை உருவானது. இந்தியா அமெரிக்கா இறக்குமதி பொருட்கள் மீது வரியை உயர்த்தியது. இதற்கு அமெரிக்காவும் பதிலடியாக வரியை உயர்த்தியது. இப்படி மாற்றி மாற்றி செத்து செத்து விளையாடும் விளையாட்டு நடந்தது. இது அமெரிக்காவை பெரிய அளவில் பாதித்தது. இந்த நிலையில், இந்தியா, அமெரிக்காவின் பொருட்களை அதிகமாக வாங்க வேண்டும்.
என்ன கோரிக்கை
சீனாவை போல இந்தியாவும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது. இந்தியா தனது வரி விதிப்பு முறையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்க கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளது. இதை பற்றி பேசத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறார். ஆம் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக இந்தியாவுடன் பேச இருக்கிறார்.
சீனாவை போலவே
இந்தியாவுடன் சீனாவை போலவே ஒப்பந்தம் செய்ய அவர் வருகிறார். ஆனால் இந்தியா, இந்த ஒப்பந்தத்தை ஏற்குமா என்பது கேள்வி. முடிவு முழுக்க பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக இருப்பதால், கூடுதலாக அமெரிக்காவிற்கான வரியை குறைக்க முடியாது. அதேபோல் இந்திய வியாபாரிகளை பகைத்துக் கொண்டு, அமெரிக்காவிடம் கூடுதலாக பொருட்கள் வாங்க முடியாது. அது மேலும் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று இந்தியா கருதுகிறது.
மோடி என்ன செய்வார்
இந்தியாவை பணிய வைப்பதே டிரம்பின் பிளான் என்கிறார்கள். இதுதான் இன்று அவரின் ஆக்சன் பிளான். தன்னுடைய மகளை அவர் அழைத்து வருவதற்கும் இதுதான் காரணம். இதனால் மோடி என்ன செய்ய போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. சீனா போல இந்தியாவும் சமாதானம் செய்யுமா , அல்லது வர்த்தக போருக்கு வழி வகுக்குமா என்று இன்று தெரியும்.