அறிவியல் வெற்றி பெறுகிறது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்படுகிறது... ஐநா வேதனை
நியூயார்க்: அறிவியல் வெற்றியால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒற்றுமை இல்லாததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது.
உலகில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரசும் வேகமாகப் பரவுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனாவின் ஒரே நம்பிக்கையாகத் தடுப்பூசியே பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
உயிரிழப்பு
இருப்பினும், கொரோனா காரணமாக உலகெங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தைத் தாண்டியது. இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை என்றும் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல உலகெங்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 9.43 கோடியை தாண்டியுள்ளது.
ஐநா வேதனை
கொரோனாா காரணமாக உலகெங்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது வேதனை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குநர் அன்டோனியோ குடரெஸ் கூறினார். மேலும், "இன்று நாம் தடுப்பூசி வெற்றிடத்தைக் காண்கிறோம். அதாவது பணக்கார நாடுகளுக்குத் தடுப்பூசி அதிகளவில் விரைவாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஏழ்மையான நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில்லை" என்றார்
ஒற்றுமை இல்லாததாலேயே பேரழிவு
இங்கு அறிவியல் வெற்றி பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட குடரெஸ் நாடுகளுக்குள்ளே ஒற்றுமை இல்லாததாலேயே பேரழிவு ஏற்படுகிறதாக வேதனை தெரிவித்தார். எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் அவர், "சில நாடுகள் விதிமுறைகளை புறந்தள்ளி தடுப்பூசிகளை வாங்குகின்றன. அவர்கள் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை வாங்குகின்றன.
எந்த நாடாலும் தனியாக கொரோனாவை வெல்ல முடியாது
தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு அரசிற்கும் உள்ளது. ஆனால் சில நாடுகளுக்கு மட்டும் அதிகளவில் தடுப்பூசி கிடைப்பது சரியானது இல்லை. இது உலகம் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதைத் தாமதப்படுத்தும். எந்த ஒரு தேசத்தாலும் தனியாக கொரோனாவை வெல்ல முடியாது. முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும், அதிக ஆபத்தான சூழலில் பணிபுரிபவர்களுக்கும் தடுப்பூசிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்றார்.