திடீர் திருப்பம்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு அசத்தல் வெற்றி
Recommended Video
நியூயார்க்: புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடுமையாக கண்டித்துள்ளது.
கண்டன தீர்மானத்தை தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் எவ்வளவோ முயற்சி செய்தும், இந்தியா இந்த விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
மேலும் முக்கிய திருப்பமாக, கண்டன தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடான சீனாவும் ஆதரவு அளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை
கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற, பாகிஸ்தானை சேர்ந்த, தீவிரவாத அமைப்பின் ஒரு தீவிரவாதி அதில் அகமது தார், என்பவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு, ராஜதந்திர ரீதியில் பாகிஸ்தானை தனிமைபடுத்தும் முயற்சிகளை இந்தியா தீவிரமாக எடுக்கத் தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் அசத்தல்
அதன் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், தாக்குதலுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதோடு இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என்பதை குறிப்பிட செய்ய வேண்டும் என்பதில் இந்தியா தீவிரம் காட்டியது. இதனிடையே, இந்தியாவின் நட்பு நாடான பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தது.
கடும் கண்டனம்
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகள், ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான, மோசமான தாக்குதலுக்கு மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றனர். இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இரங்கல்
இந்த தாக்குதலில் பலியான வீரர்கள் குடும்பத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும், தீவிரவாதம் என்பது ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர், அவர்களை பாதுகாப்போர், அனைவரும் அதற்குப் பொறுப்பாகப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
தீவிரவாதம்
தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அது மிகப் பெரிய குற்றமாகும். அதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. எந்த ஒரு நோக்கத்திற்காக, அல்லது யாருக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டாலும், தீவிரவாதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் சீனாவும் ஆதரவளித்து நிறைவேற்றப்பட்டது.
சீனா பணிந்தது
சீனா, பாகிஸ்தானின் நட்பு நாடாகும். ஜெய்ஷ்-இ-முகமது (பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரக்கூடிய) அமைப்புதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தபோதிலும் கூட, இந்த தீர்மானத்திற்கு சீனா ஆதரவு அளித்துள்ளது, என்பதை வைத்து பார்த்தால், சர்வதேச சமூகத்தின் நெருக்கடியை பாகிஸ்தானுக்கு எதிராக கொண்டு செல்வதில் இந்தியாவின் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் முந்தைய காலகட்டங்களில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத தலைவன், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனாதான் முட்டுக்கட்டை போட்டு வந்தது. இப்போது அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிரான தீர்மானத்திற்கு சீனா ஆதரவு அளித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதி
அடுத்ததாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவன், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை பிரான்ஸ் நாடு, ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீர்மானத்தையும் சூட்டோடு சூடாக நிறைவேற்றிவிட்டால், மசூத் அசார், ஒசாமா பின்லேடனை போல சர்வதேச நாடுகளால் வேட்டையாடப்படும் வாய்ப்புள்ளது.