இஸ்ரேல் வகுத்த பிளான்.. அமெரிக்கா அனுப்பிய தூது.. 2020ல் நடந்த மிகப்பெரிய சர்வதேச அரசியல் மாற்றம்!
நியூயார்க்: 2020ம் ஆண்டில் சர்வதேச அரசியலில் நடந்த மிகப்பெரிய மாற்றம் என்றால் அது இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான எதிர்பாராமல் உருவாகிய நட்புதான்
2020ம் ஆண்டு உலகம் முழுக்க பல மாற்றங்கள் நடந்தது. கொரோனா பாதிப்பு, பொருளாதார மந்த நிலை, சர்வதேச நாடுகளுக்கு இடையிலான எல்லை மோதல், போர் பதற்றம் என்று இந்த வருடம் முழுக்க நினைத்து முடியாத நிறைய சம்பவங்கள் நடந்தது.
இந்த 2020 வருடத்தில் நடந்த மிகப்பெரிய திருப்பம் என்றால் அது இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான உறவுதான். இத்தனை வருடம் மாபெரும் பகையாளிகளாக இருந்து வந்த இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடுகளும் தற்போது நெருக்கமாகி உள்ளது.
எப்படி
பாலஸ்தீன நில அபகரிப்பு, போர் மோதல் என்று பல விஷயங்கள் காரணமாக இஸ்ரேல் மீது இத்தனை வருடமாக இஸ்லாமிய நாடுகள் கடும் கோபத்தில் இருந்தது. இஸ்லாமிய மக்களை கொடுமைப்படுத்துகிறது, இஸ்ரேலின் செயலுக்கு அமெரிக்காவும் துணை போகிறது என்று பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் புகார் வைத்து வந்தது. இந்த நிலையில் இந்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
மாற்றம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இஸ்ரேல் அரபு அமீரகம் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. இரண்டு நாடுகளும் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்ற நிலை வந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்கா - அமீரகம் - இஸ்ரேல் இடையே மூன்று நாட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதிசயமாக இதில் பாலஸ்தீனம் குறித்தும் கோரிகைகள் இடம்பெற்று இருந்தது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் மூலம் அமீரகத்துடன் இஸ்ரேல் பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். பொருளாதார ரீதியாக இரண்டு நாடுகளும் உறவுகளை மேற்கொள்ள முடியும். ஹாட்லைன் தொடர்பு கூட இல்லாமல் இருந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் இதனால ஹாட்லைன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் ராணுவ ரீதியான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இணைந்தது
ராணுவ ரீதியாக இதனால் இஸ்ரேல் அமீரகத்தில் வியாபாரம் செய்ய முடியும். இதற்கு கைமாறாக இஸ்ரேல் பெரிதாக வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. பாலஸ்தீனத்தில் இதற்கு மேல் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று மட்டுமே இஸ்ரேல் கூறியது. அதுவும் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு செய்ய மாட்டோம் என்று மட்டுமே இஸ்ரேல் கூறியது.
உறுதி இல்லை
இதனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளாது என்பதில் எந்த உறுதியும் இல்லை. ஆனாலும் அமீரகம் - இஸ்ரேல் இடையே இதனால் மிகப்பெரிய உடன்படிக்கை செய்யப்பட்டு விமான போக்குவரத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக இன்னொரு பக்கம் பஹ்ரைன், சூடான் போன்ற நாடுகளும் இஸ்ரேல் உடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
எப்படி நடக்கும்
முழுக்க முழுக்க அமெரிக்காவின் மேற்பார்வையில் இந்த ஒப்பந்தங்கள் நடந்துள்ளது.இஸ்ரேல் என்ற நாடு உருவாக்க அமெரிக்கா முக்கிய காரணமாக இருந்தது. தற்போது இஸ்ரேலின் வெளியுறவு கொள்கையை தீர்மானிப்பதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தனை நாட்கள் இஸ்ரேலை பகையாளியாக பார்த்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் உடன் சமாதானமாகி உள்ளது.
சவுதி
கடந்த ஞாயிற்றுக்கிழமை சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் சந்திப்பு நடத்தினார் என்று கூறப்பட்டது. இப்படி இஸ்லாமிய நாடுகள் எல்லாம் இஸ்ரேல் உடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதை ஈரான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் மிக கடுமையாக கண்டித்து உள்ளது.
2020
2020ம் ஆண்டில் உலகம் முழுக்க சர்வதேச உறவுகள் சீர்குலைந்தது. சீனா - இந்தியா மோதல், சீனா - அமெரிக்கா மோதல் என்று அடுத்தடுத்து மிகப்பெரிய எல்லை மோதல்கள் வந்தது. இந்த மோதல்களுக்கு இடையே நம்பிக்கை அளிக்கும் வகையில் உலக அமைதிக்காக நடந்த ஒரே நல்ல விஷயம் என்றால் அது இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான இணக்கம்தான் என்று கூறலாம்.