ஒரு அரசியல் தலைவர் செய்யுற வேலையா இது.. டிரம்ப்பை கடுமையாக சாடிய அமெரிக்க நீதிமன்றம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னை விமர்சிப்பவர்களின் டுவிட்டர் கணக்குகளை பிளாக் செய்து வருவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு கடந்த 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவரது கணக்கை 61.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதில் பலர் அதிபர் டிரம்பின் டுவிட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விமர்சனமும் செய்கிறார்கள்.
இப்படி வரும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத அதிபர் டிரம்ப், தன்னை விமர்சிப்பவர்களின் டுவிட்டர் கணக்குகளை பிளாக் செய்து வருகிறார். இது தொடர்பாக வழக்கு ஒன்று அமெரிக்காவின் தெற்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரிங்டன் பார்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்படி விமர்சிப்பவர்களின் டுவிட்டர் கணக்குகளை பிளாக் செய்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றம் தன்னை விமர்சிப்பவர்களை டிரம்ப் பிளாக் செய்வதால், அவர்களால் அதிபரின் பதிவுகளை காண முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதனை எதிர்த்து மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. தன்னை விமர்சிப்பவர்களை டிரம்ப் பிளாக் செய்வது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் இதை அதிபர் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னுடைய டுவிட்டர் பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குற்றம்சாட்டினார். இதனை மறுத்த டுவிட்டர் நிறுவனம் பின்னர் டிரம்பை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தது.இந்த சூழலில் தான் டிரம்ப், தன்னை விமர்சிப்பவர்களின் கணக்குகளை பிளாக் செய்வதாக புகார் எழுந்துள்ளது.