கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அங்கு கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை 3774 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் மால்கள், பார்கள், உணவகங்கள், திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே நிலைகுலைந்து வரும் நிலையில் அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 3000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 69 பேர் இதுவரை இறந்துள்ளனர். புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது
இதையடுத்து அமெரிக்காவின் 16மாகாணங்களிலும் (மாநிலங்கள்) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் வாழ்வியலையே அடியோடு புரட்டி போட்டு வருகிறது கொரோனா வைரஸ். 50 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஓரிடத்தில் கூட வேண்டாம் என்று அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உணவகங்கள், தியேட்டர்கள், மால்கள், பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து அதிபர் டிரம்ப், மக்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடுத்த 14 நாட்களுக்கு அமெரிக்காவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டலாம் என்று தெரிகிறது.
இதனால் அமெரிக்கா நெருக்கடியில் குழப்பத்தில் மூழ்கி உள்ளது. வெளிநாட்டுகளில் இருந்த அமெரிக்கர்கள் பலர் ஒரே நாளில் நேற்று நாடு திரும்பியதால் நெருக்கடி விமான நிலையங்களில் மக்கள் குவிந்தனர். அவர்களை சோதனைக்கு பின்பே அதிகாரிகள் அனுப்பியதால் . நீண்ட நேரம் நெரிசலில் சிக்கி தவித்தனர். அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் முக்கிய வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கு குறைத்துள்ளது.
தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள பல நாடுகள் கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்து தங்கள் எல்லைகளை மூடின. கொரோனா வைரஸ் பிரச்சனை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று வீடியோ மாநாட்டை நடத்துவார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.