கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல்
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம் பதவியேற்கப் போகும் ஜோ பிடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பைசர் மருந்தின் முதல் டோஸ் ஜோ பிடனுக்கு செலுத்தப்பட்டது.
நியூயார்க்: அமெரிக்காவில் தினசரியில் 2 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம் பதவியேற்கப் போகும் ஜோ பிடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பைசர் மருந்தின் முதல் டோஸ் ஜோ பிடனுக்கு செலுத்தப்பட்டது.
உலக அளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 1,84,49,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து அமெரிக்காவில் 1,07,60,451பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,26,588 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1லட்சத்து 75ஆயிரம் பேர் வரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2021ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இந்தியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 14ம் தேதி முதல் அமெரிக்காவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அந்நாட்டு மக்கள் முன்னிலையில் துணை அதிபரான மைக் பென்ஸ் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மைக் பென்ஸ்க்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு அமெரிக்க செய்தி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கலக்கல்.. மக்கள் முன்னிலையில்.. டிவி நேரலையில்.. இன்று, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஜோ பிடன்
இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பேசிய ஜோ பிடன் மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.