இரவோடு இரவாக ஆப்கானுக்கு சீக்ரெட் ட்ரிப் அடித்த டிரம்ப்.. விரைவில் தாலிபான்களுடன் சந்திப்பு.. ஏன்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவோடு இரவாக ஆப்கானிஸ்தான் சென்று அங்கிருக்கும் அமெரிக்க ராணுவ படைகளை சந்தித்தார்.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இரவோடு இரவாக ஆப்கானிஸ்தான் சென்று அங்கிருக்கும் அமெரிக்க ராணுவ படைகளை சந்தித்தார். அவர் விரைவில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், உலக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். தாலிபான்களை அழித்தே தீருவேன் என்று சுற்றித்திரிந்த அமெரிக்கா அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை செய்ய முயன்று வருகிறது.
அதிலும் இந்த அமைதி பேச்சுவார்த்தையை செய்வது அமெரிக்க அதிபர் டிரம்ப். சொன்னால் நம்ப முடியாது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
பேச்சு
ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ், தாலிபான் உட்பட தீவிரவாத இயக்கங்களை அழிப்பதற்காக அமெரிக்கா அங்கு கடந்த 11 வருடங்களாக போர் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதை முடிவிற்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த சில வாரங்கள் முன் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் பகுதியில் தாலிபான்கள் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் என்ன
ஆனால் இது கடைசியில் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலால் இந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டது. காபூலில் கடந்த வாரம் தாலிபான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் இந்த சந்திப்பை ரத்து செய்கிறேன், என்று டிரம்ப் இதுகுறித்து குறிப்பிட்டார்.
என்ன எதிர்ப்பு
இதையடுத்து தாலிபான்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தது. அமெரிக்கா அமைதிக்கு அழைப்பது போல அழைத்து எங்களை ஏமாற்ற பார்க்கிறது. நாங்கள் ஏமாற மாட்டோம். எங்களின் ஜிகாத் போராட்டம் தொடரும் என்று தாலிபான் கூறியது.
ஆனால் என்ன
ஆனால் புதிய திருப்பமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் தாலிபான்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த முறை மொத்தமாக சமரசம் செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக சால்மா காலிஸாத் என்ற ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க தூதரை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.
யார் இவர்
இவர் கடந்த ஒரு வருடமாக தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு ஆகியவற்றுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 10க்கும் அதிகமான கூட்டங்களை அவர் நடத்திவிட்டார். இவரை வைத்துதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி - தாலிபான்கள் மூவருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
எங்கு சென்றார்
இந்த நிலையில் நேற்று இரவு திடீர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு விமானம் மூலம், யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக ஆப்கானிஸ்தான் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் அமெரிக்க படையின் தலைமை இடத்தில் அவர் வீரர்களை சந்தித்துள்ளார். அதன்பின் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உடன் சந்திப்பு நடத்தினார்.
இரண்டு காரணம்
அதன்படி அமெரிக்கர்களின் பண்டிகையான தேங்க்ஸ் கிவ்விங் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாட வேண்டும் என்று டிரம்ப் இப்படி சென்றுள்ளார். அதே சமயம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உடன் தாலிபான்களின் சமரசம் குறித்தும் பேசி உள்ளார்.
தயாராக இருக்கிறார்கள்
தலிபான்கள் உடன் பேசி வருகிறோம். அவர்கள் சமாதானம் செய்ய தயாராக இருக்கிறார்கள். விரைவில் முழுமையான மீட்டிங் நடக்கும். அவர்கள் சில கோரிக்கைகள் வைக்கிறார்கள். அதை விவாதித்து வருகிறோம்.
கைவிட முடிவு
சமாதானம் செய்த பிறகு தாலிபான்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவார்கள். அதன்பின் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும், என்று டிரம்ப் குறிப்பிட்டார். இந்த சீக்ரெட் பயணம் மற்றும் மீட்டிங் குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இன்று காலை செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.