பென்டகன் கதை ஓவர்.. சிஐஏ, எப்பிஐ மீது குறி வைக்கும் டிரம்ப்.. பெரிய பிளான்.. அதிரும் வெள்ளை மாளிகை!
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சிஐஏ, எப்பிஐ போன்ற உயர் அமைப்புகளில் இருக்கும் இயக்குனர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் பதவியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்த பின் வரிசையாக அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கி வருகிறார். தனக்கு எதிராக செயல்பட்ட, கருத்து கூறிய அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை டிரம்ப் பணியில் இருந்து நீக்கினார். அவருக்கும் பதிலாக தனது விசுவாசி கிறிஸ்தபர் மில்லருக்கு அந்த பதவியை கொடுத்தார்.
மாற்றம்
எஸ்பர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக கருத்துக்களை கூறியவர். ஜார்ஜ் பிளாய்டு போராட்டத்தின் போது அமெரிக்காவிற்குள் ராணுவத்தை இறக்கும் டிரம்பின் திட்டத்தை தடுத்து நிறுத்தியது எஸ்பர்தான். இதனால் தற்போது எஸ்பரை டிரம்ப் நீக்கி உள்ளார். இவரை தொடர்ந்து நேற்று அமெரிக்காவின் சிசா அமைப்பான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ் க்ரெப்சை பதவியில் இருந்து நீக்கினார்.
நீக்கம்
அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை என்று கிறிஸ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை டிரம்ப் பதவியில் இருந்து நீக்கி உள்ளார். கிறிஸ் தவறான, பொய்யான கருத்துக்களை கூறுவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இப்படி வரிசையாக தனக்கு எதிராக பேசும் அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் பணியில் இருந்து நீக்கி வருகிறார்.
அடுத்த நீக்கம்
இந்த நிலையில் டிரம்ப் இனி வரும் நாட்களில் சிஐஏ, எப்பிஐ அதிகாரிகளை நீக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி எப்பிஐ இயக்குனர் கிறிஸ்தபர் வேரி டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்கு மூலம் கொடுத்தவர். அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருக்கிறது என்று காங்கிரஸ் விசாரணையில் வாக்கு மூலம் கொடுத்தவர்தான் கிறிஸ்தபர். இவரை பதவியில் இருந்து நீக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
வேறு யார்
அதேபோல் சிஐஏ அமைப்பின் இயக்குனர் ஜீனா காஸ்பலை நீக்கவும் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். 2016 அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து சிஐஏ விசாரணை செய்தது. இந்த விசாரணைகளை மொத்தமாக வெளியிட வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால் இதை ஜீனா கேட்கவில்லை என்பதால் அவரை டிரம்ப் நீக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.
அதிர்ச்சி
இரண்டு முக்கிய அதிகாரிகள் நீக்கம், இன்னும் இரண்டு முக்கிய அதிகாரிகளை நீக்குவதற்கான ஆலோசனை என்று டிரம்ப் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதோடு அமெரிக்க படைகளையும் பல நாடுகளில் இருந்து திரும்ப பெறும் முடிவில் உள்ளார். டிரம்பின் இந்த தொடர் அதிரடியால் வெள்ளை மாளிகையே ஆடிப்போய் உள்ளது.