கடைசி சில நாட்கள்.. சீனாவிற்கு பெரிய இடி கொடுக்க போகும் டிரம்ப்.. பிடன் நினைத்தாலும் தடுக்க முடியாது
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் அதிபர் டிரம்ப், தனது ஆட்சியின் கடைசி காலத்தில் சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 232 இடங்களில் வென்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 290 இடங்களில் வென்று, அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார்.
பிடன் அதிபர் தேர்தலில் வென்று இருந்தாலும் கூட.. அடுத்த ஜனவரி வரை டிரம்ப்தான் அதிபர். அதிபர் பதவிக்கான அதிகாரங்கள் டிரான்சிஷன் முறையில் பிடனுக்கு வழங்கப்படும்.
எப்படி
இந்த நிலையில் தனது ஆட்சியின் கடைசி காலத்தில் சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுக்க போகிறார் என்று கூறுகிறார்கள். பதவியை விட்டு செல்லும் முன் சீனாவிற்கு எதிராக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க டிரம்ப் திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக சில முடிவுகளை அமெரிக்காவே விரும்பாது என்றும் கூறுகிறார்கள்.
என்ன செய்தார்
சில நாட்களுக்கு முன் சீனாவின் ராணுவத்தோடு நெருக்கமாக இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை அதிபர் டிரம்ப் தடை செய்தார். அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடைதான் டிரம்ப்பின் முதல் நடவடிக்கை என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்களில் சீனா மீது பொருளாதார ரீதியாக சின்ன சின்ன கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
வேறு என்ன
அதேபோல் தென் சீன கடல் எல்லை பிரச்சனை உள்ளிட்ட சர்வதேச எல்லை பிரச்சனைகளில் டிரம்ப் இனி வரும் நாட்களில் முக்கிய முடிவு எடுப்பார் என்றும் கூறுகிறார்கள். சீனாவின் மீன் பிடி திட்டங்களுக்கு தடை, சீனாவின் முதலீடுகளுக்கு தடை என்று பல்வேறு தடைகளை, நடவடிக்கைகளையே டிரம்ப் எடுக்க போகிறார் என்றும் கூறுகிறார்கள்.
தடை
அதேபோல் சீனாவின் அதிகாரிகள் சிலருக்கு விசா தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். வரும் காலத்தில் பிடனின் ஆட்சியின் கீழ் மாற்றவே முடியாத அளவிற்கு பிரச்சனையை கொண்டு செல்ல டிரம்ப் முயன்று வருகிறார் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் உல்லியாட் தெரிவித்துள்ள கருத்தில், சீனா இறங்கி போகாத வரை இந்த பிரச்சனை சரியாகாது. டிரம்ப் எடுக்க போகும் சில முடிவுகள், இனி வரும் அமெரிக்க அரசால் மாற்ற முடியாத வகையில் இருக்கும். சீனாவே இறங்கி போனால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். டிரம்ப் எடுக்க போகும் முடிவுகளால் பிடன் நினைத்தாலும் சீனாவுடன் உறவை சரி செய்ய முடியாது என்று இவர் தெரிவித்துள்ளார்.