உளவு தகவலை கூட கேட்கவில்லை.. அன்றாட பணிகளை செய்ய மறுக்கும் டிரம்ப்.. அமெரிக்காவில் தொடர் பதற்றம்!
நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் அதிபர் டிரம்ப்.. தனது அன்றாட பணிகளை கவனிப்பது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டிவிட்டரில் மட்டுமே இவர் அரசை நடத்தி வருகிறார் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் 6 பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முதல்நாள் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார்கள், வடக்கு புளோரிடாவில் ஏற்பட்டு இருக்கும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர், அங்கு கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இன்னொரு பக்கம் அமெரிக்காவில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளது...
அமெரிக்கா முழுக்க இப்படி பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில்.. ஆனால் இந்த பிரச்சனைகள் எதை பற்றியும் பேசாமல் டிரம்ப் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். ஆட்சி நடத்தவே விருப்பம் இல்லாதவர் போல கடந்த ஒரு வாரமாக இவர் செயல்பட்டு வருகிறார். டிரம்பின் செயல் அமெரிக்காவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்ப் என்ன செய்கிறார்
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே.. மந்திரித்துவிட்டவர் போல டிரம்ப் செயல்படுகிறார். தினசரி செய்தியாளர் சந்திப்பை இவரோ, இவரின் செய்தியாளர் சந்திப்பு குழுவோ நடத்தவில்லை. கொரோனா குறித்த தினசரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அன்றாட பணிகளை கவனிக்காமல், தினமும் டிவிட்டரில் மட்டும் தேர்தல் முடிவுகள் குறித்து தொடர் டிவிட்களை செய்து புலம்பி வருகிறார்.
பேசுவது இல்லை
டிரம்ப் முழுக்க முழுக்க தேர்தல் குறித்தும், அதில் முறைகேடு நடந்துவிட்டது என்பது குறித்து மட்டுமே பேசி வருகிறார். தேர்தலில் பொய்யான வாக்குகளை எண்ணிவிட்டார்கள். எனக்கு ஆதரவாக விழுந்த வாக்குகளை பதுக்கிவிட்டனர். தபால் வாக்கில் முறைகேடு நடத்துவிட்டது என்று டிரம்ப் குறிப்பிட்டு வருகிறார்.
மாறும்
இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவுகள் மாறும். நான்தான் தேர்தலில் வெற்றிபெற போகிறேன். தேர்தல் முடிவுகளில் செய்யப்பட்ட முறைகேடுகளை சரி செய்வோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு வருகிறார். இந்த ஒரே விஷயத்தை டிரம்ப் வெவ்வேறு வார்த்தைகளில் குற்றச்சாட்டாக வைத்து வருகிறார். இதை தவிர வேறு எதை பற்றியும் டிரம்ப் பேசுவதே இல்லை.
தேசிய பாதுகாப்பு
முக்கியமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்தும் கூட டிரம்ப் கவனம் செலுத்தவில்லை. தினமும் அதிபர் டிரம்பிற்கு அளிக்கப்பட வேண்டிய உளவு தகவல்கள், பாதுகாப்பு தகவல்கள் அளிக்கப்படவில்லை. அதேபோல் டிரம்ப் பாதுகாப்பு தொடர்பாக கையெழுத்து போட வேண்டிய முக்கியமான கோப்புகளிலும் கூட கையெழுத்து போடவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கும் விருப்பம் இல்லை
டிரம்ப் தற்போது ஒரு அதிபர் போலவே செயல்படவில்லை. ஆட்சி செய்வதற்கு விருப்பம் இருக்கும் நபர் போலவே செயல்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு உள்ளேயே இப்படி சிலர் புலம்ப தொடங்கி உள்ளனர். டிரம்ப் செயல்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
என்ன செய்கிறார்
டிரம்ப் முழுக்க முழுக்க கடந்த ஒரு வாரமாக வெள்ளை மாளிகையில் இருக்கிறார். இரண்டு நாட்கள் கோல்ப் விளையாடினார். மீதம் இருக்கும் நாட்களில் பிடன் பதவி ஏற்பதை தடுக்கும் பணிகளை செய்கிறார். பிடனின் டிரான்சிஸன் பணிகளை டிரம்ப் தடுத்து வருகிறார். இதுபோல் பென்டகன், வெள்ளை மாளிகையில் சில அதிகாரிகளை நீக்கிவிட்டு..தனது விசுவாசிகளை நியமித்து உள்ளார். வேறு எந்த பணிகளையும் டிரம்ப் செய்யவில்லை, என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் என்ன
இதனால் அமெரிக்காவில் பிடன் முழுமையாக பதவி ஏற்கும் வரை என்னவெல்லாம் நடக்குமோ என்று பதற்றம் எழுந்துள்ளது. ஆனால் அதே சமயம் டிரம்ப் தனது பணிகளை செய்து வருகிறார், சீனா ராணுவத்தில் அமெரிக்க முதலீட்டை தடுத்து உத்தரவிட்டார், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் வாங்கினார், புளோரிடா வெள்ளம் குறித்து கேட்டறிந்தார், என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் அவருக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.