நிலைமை சரியில்லை.. தேர்தலை தள்ளி வைக்கலாம்.. டிரம்ப் போடும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவில் திருப்பம்
நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.
வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்கா ஆர்வமுடன் எதிர்பார்க்கும் மாடர்னா தடுப்பூசி விலை எவ்வளவு.. வெளியான தகவல்
ஆனால் என்ன
உலக நாடுகள் எல்லாம் இந்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது. அமெரிக்காவில் நடக்க உள்ள இந்த தேர்தலில் பெரும்பாலான மக்கள் தபால் வாக்குகளை செலுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர். பெரும்பாலும் 70%க்கும் அதிகமான நபர்கள் தபால் வாக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் முறைகேடு
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். தபால் வாக்குகள் மூலம் தேர்தல் நடந்தால் அது சரியாக இருக்காது. இதனால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதில் முறைகேடு செய்ய உள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் நேர்மையாக இருக்காது என்று டிரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
மீண்டும் சொன்னார்
இந்த நிலையில் தற்போது மீண்டும் டிரம்ப் இது தொடர்பாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதில், தபால் வாக்குகள் மூலம் 2020 தேர்தல் முடிவுகள் சரியாக வராது. இதனால் அமெரிக்க வரலாற்றில் மொத்தமாக தவறான மற்றும் மோசடியான தேர்தல் நடக்க உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகப்பெரிய அவமானமாக இருக்க போகிறது. இதனால் பாதுகாப்பாக தேர்தலை நடத்தும் வரை தள்ளி வைக்கலாமா? என்று டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.
என்ன சந்தேகம்
கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க டிரம்ப் திட்டமிடுகிறார் என்று கூறுகிறார்கள். இது அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மாட்டார் என்று புகார்கள் எழுந்தது. அதாவது தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக வந்தால், அதை ஏற்றுக்கொள் மாட்டார் என்று கூறுகிறார்கள்.
மக்கள் கேள்வி
அதாவது டிரம்ப் ஏதாவது செய்து மக்களை ஏமாற்ற பார்ப்பார். எப்படியாவது வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டே கலகம் விளைவிக்கலாமா என்று பார்ப்பார். அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நபர் கிடையாது. அவர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமைதியாக இருக்க மாட்டார். அதற்கு முன்பே தேர்தலில் எப்படியாவது பிரச்சனை செய்ய முயற்சி செய்வார், என்று எதிர்க்கட்சி வேட்பாளர் பிடன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ராணுவம் வரும்
டிரம்ப் ஒருவேளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மறுத்தால் ராணுவம் தனது கடமையாக செய்யுமென்று நினைக்கிறேன். ராணுவம் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து டிரம்பை வெளியேற்றும் என்று நினைக்கிறேன், என்றும் பிடன் குறிப்பிட்டு இருந்தார். தற்போது பிடன் சந்தேகம் கொண்டது போலவே டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க ஆலோசனை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.