பெண்களை சீண்டுறீங்களா? தாலிபானுக்கு பதிலடி தந்த அமெரிக்கா.. விசாவிற்கு செக்.. பரபர பதிலடி
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபோது கூறிய வாக்குறுதிக்கு முரணாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாலிபன்களுக்கு எதிராக புதிய விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டிலிருந்து சுமார் 2021ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளாக ஆப்கனிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம் 2021ம் ஆண்டு வெளியேறியது. இதனையடுத்து புதிய ஆப்கானிஸ்தான் உருவாவதாக தாலிபன்கள் கூறியிருந்தனர். தாலிபன்கள் மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது பெண் கல்வி குறித்து அனைவரும் அச்சம் தெரிவித்திருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த தாலிபன்கள், புதிய ஆப்கனிஸ்தானில் தாலிபன்களும் புதியவர்களாக இருப்பார்கள் என்று கூறியிருந்தனர்.
ஆனால், இந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் தாலிபன்கள் போட்ட சட்டங்கள் இவர்கள் கூறிய கருத்துக்குக்கு முற்றிலும் தலைகீழாக இருந்திருக்கிறது. அதாவது மாணவர்களும், மாணவிகளும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டு இருவருக்கும் இடையே தடுப்பு உருவாக்கப்பட்டது. அதேபோல 6ம் வகுப்புகளுக்கு மேல் மாணவிகள் கல்வி பயிலவும் தடை விதிக்கப்பட்டது. சரி இத்துடன் இவர்களின் அட்டகாசம் நின்று விடும் என்று நினைத்தால், இது உயர்க்கல்வியிலும் தொடர்ந்தது.
உயர்கல்வி
அந்நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றிருந்தனர். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் உயர் கல்வி பயில தடைவிதிப்பதாக தாலிபன் அரசு அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கல்வி துறையில் நிலைமை இப்படி எனில், வேலை வாய்ப்பில் ஆசிரியர், மருத்துவர் பணிகளை தவிர வேறு எந்த பணிகளிலும் பெண்கள் வேலை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
கட்டுப்பாடுகள்
தாலிபன்களின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் மேலெழுந்தன. இந்நிலையில், அமெரிக்க தாலிபன்களுக்கு எதிராக புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "இதுவரை தாலிபன்களின் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 10 லட்சம் சிறுமிகள் பள்ளிக்கு வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது.
சர்வதேச சமூகத்தின் மரியாதை
அந்நாட்டில் ஏற்கெனவே கடுமையான பொருளாதார பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் மனிதாபிமான நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். இந்த நடவடிக்கைள் மனிதத்தின் இன்றியமையாத கூறுகளை மோசமாக பாதிக்கும். ஆப்கானில் உள்ள சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை சுதந்திரம் பாதுகாக்கப்படாதவரை சர்வதேச சமூகத்தின் மரியாதையையும், ஆதரவையும் தாலிபன்கள் எதிர்பார்க்கக்கூடாது. எனவே முன்னாள் இந்நாள் தாலிபன்கள், அரசு சாரா பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் அந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடக்கு முறைக்கு உள்ளாக்க காரணமாக இருந்தவர்கள் அனைவரின் விசாக்கள் மீதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
பட்டியல்
ஆனால் இந்த பட்டியலில் எத்தனைப்பேர் இருக்கிறார்கள் என்று ஆண்டனி பிளிங்கன் இதுவரை விரிவாக கூறவில்லை. அதேபோல புதிய விசா கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானை பொறுத்த அளவில், பெண்களுக்கு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை போன்று உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காக்களுக்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.