"நோ ஜஸ்டிஸ்... நோ பீஸ்”... கண்களில் கோபம்.. ஆக்ரோஷமான முழக்கம்.. அமெரிக்காவின் எதிர்காலம் இவள்தான்!
நியூயார்க்: அமெரிக்காவில் இனப்பாகுபாட்டுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு சிறுமி, மிக ஆக்ரோஷமாக முழக்கமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் கொரோனா, மற்றொரு பக்கம் இந்த போராட்டம் என இரண்டையும் சமாளிக்க முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.
'கருப்பு நிறத்தவர்களின் உயிரும் முக்கியம்' என முழக்கம் அமெரிக்காவுக்கு வெளியேவும் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. சமூகவலைதளப் பக்கத்தில் இந்த முழக்கம் தான் பிரதானமாக இடம்பெற்று வருகிறது.
ஜார்ஜின் கொடூர கொலை.. வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்.. டிரம்ப் அதிர்ச்சி!
நியூயார்க் பேரணி
இந்த சூழலில் 'நீதி இல்லையெனில் அமைதி இல்லை' எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
ஆக்ரோஷச் சிறுமி
பேரணியில் கலந்துகொண்ட ஒரு சிறுமி கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். "நோ ஜஸ்டிஸ். நோ பீஸ்", என மிக ஆக்ரோஷமாக முழக்கமிட்டுக்கொண்டே அந்த சிறுமி நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. சிறுமியின் முகத்தில் தெரியும் கோபமும், ஆங்காரமும் நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துவிட்டது.
இதுதான் எதிர்காலம்
இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ பல்வேறு விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் பால்ட்வின், "வெள்ளை மேலாதிக்கவாதிகளின் கவனத்திற்கு, இது தான் எதிர்காலம். இவள் யாரிடமும் யாசகம் கேட்டு கையேந்த மாட்டாள்" என குறிப்பிட்டுள்ளார்.
கண்களில் கண்ணீர்
பால்ட்வின்னை போல மற்ற ஹாலிவுட் பிரபலங்களும் இந்த வீடியோவை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். "அந்த சிறுமியின் கண்களில் தெறிக்கும் நெருப்பும், குரலில் எதிரொலிக்கும் கோபமும் எனது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இது தான் எதிர்காலம். அவளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது", என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
ஜார்ஜ் பிளாய்ட் படுகொலை
அமெரிக்க - ஆப்ரிக்க இளைஞரான ஜார்ஜ் பிளாய்ட் கடந்த மாதம் 25ம் தேதி, வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். தனது முழங்காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் அந்த போலீஸ்காரர். சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த கொடூர வீடியோ தான் இந்த போராட்டங்களுக்கு காரணம்.
கருப்பின மக்களின் போராட்டம்
அமெரிக்காவில் ஒரு காலத்தில் அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் கருப்பின மக்கள். பல ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அந்த மக்கள் தொடர் போராட்டங்களின் காரணமாகவே தங்களின் உரிமைகளை வென்றெடுத்தனர். கருப்பரான ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகும் அளவுக்கு அவர்களின் நிலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.