கொள்ளையர்களிடம் சிக்கிய அம்மா.. தைரியமாக சண்டை போட்ட 5 வயது குட்டிப்பையன்.. குவியும் பாராட்டுகள்!
நியூயார்க்: வீட்டிற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்களிடம் இருந்து தாயை காப்பாற்றும் நோக்கில் சண்டையிடும் 5 வயது அமெரிக்க சிறுவனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள சவுத் பெண்ட் எனும் பகுதியில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு வீட்டிற்குள் திடீரென நான்கைந்து கொள்ளையர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைகின்றனர்.
இதைபார்த்து அதிர்ச்சியடையும் அந்த வீட்டு பெண்மணி, தான் பார்த்துக்கொண்டிருந்த இஸ்திரி வேலையை அப்படியே விட்டுவிட்டு எழுகிறார். கொள்ளை கும்பல் அந்த பெண்மணியை இழுத்துக்கொண்டு வீட்டின் மையப்பகுதிக்கு செல்கிறது. அருகில் இருக்கும் அவரது மகன் தாயை காப்பாற்றும் நோக்கில் அந்த கொள்ளையர்களுடன் சண்டைபோட முயல்கிறான். தனது கையில் இருக்கும் ஒரு பொம்மையை தூக்கி எறிந்து கொள்ளையர்களை தாக்குகிறான்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாயை காப்பாற்றப் போராடும் அந்த சிறுவனுக்கு 5 வயது தான் ஆகிறது. அவனது பெயர் டேவிட். இந்த சிறிய வயதில் இத்தனை துணிச்சலா என நெட்டிசன்கள் டேவிட்டை ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள். போலீசாரும் டேவிட்டின் வீரத்தை பாராட்டியுள்ளனர்.
நல்லவேளையாக டேவிட் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் யாரையும் தாக்கவில்லை. மேலும் எந்த பொருளையும் எடுத்து செல்லவில்லை. தரை மற்றும் மேற்கூரையை நோக்கி மட்டும் ஓரிரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.