தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘இந்த’ தந்தையின் அன்புக்கு முன்னால்.. கலங்க வைக்கும் நடனம்!
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மகனை உற்சாகப்படுத்த, நடனமாடிய தந்தையின் வீடியோ வைரலாகியுள்ளது.
நியூயார்க்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் தனது மகனை உற்சாகப்படுத்த, ஜன்னலுக்கு வெளியே நடனமாடிய தந்தையின் வீடியோ கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கலங்கச் செய்கிறது.
அமெரிக்க தம்பதியான சக் - லோரிக்கு ஏடன் எனும் 14 வயது மகன் உள்ளார். ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏடன், டெக்சாசில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவமனையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏடனுக்கு மருத்துவமனையில் இருந்து உதவி செய்வதற்கு பெற்றோரில் யாரேனும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். எனவே தாய் லோரி மட்டும் ஏடனுடன் மருத்துவமனையில் இருக்கிறார். தந்தை சக்கிற்கு மருத்துவமனைக்கு உள்ளே செல்ல முடியவில்லை.
சாலையில் நடனம்
அவர் மருத்துவமனைக்கு வெளியே தான் தங்கியிருக்கிறார். இருப்பினும் மகனை உற்சாகப்படுத்த தினமும் மருத்துவமனைக்கு வரும் சக், சாலையில் இருந்தபடி பல்வேறு நடன அசைவுகளை செய்து காட்டுகிறார். ஜன்னலில் இருந்து தந்தையின் நடனத்தை பார்க்கும் ஏடன் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறான்.
அரவணைப்பு
"ஏடனுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவே இப்படி நடனமாடுகிறேன். அவன் தனியாக இல்லை. நாங்கள் எல்லோரும் அவனுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்துவது மிக முக்கியம்", என்கிறார் இந்த பாசக்கார தந்தை சக்.
கணவரின் நடனம்
"எனது கணவர் இப்படி நடனமாடுவதால் ஏடன் உற்சாகமடைகிறான். குடும்பம் தான் எல்லாமே. ஒன்றாக இருப்பது தான் முக்கியம். குடும்பத்துடன் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும்", என்கிறார் ஏடனின் தாய் லோரி.
பாராட்டு
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மகனை உற்சாகப்படுத்த, உடனிருக்க முடியாவிட்டாலும் வெளியில் இருந்து நடனமாடும் தந்தை சக்கின் வீடியோவை சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. உள்ளுக்குள் ஆயிரம் தவிப்பை அடக்கி வைத்துக் கொண்டு குழந்தைகளுக்காக உருகும் தகப்பன்களின் பிரதிபலிப்பாக சக் உள்ளார். இதனாலேயே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பார்ப்போர் நெஞ்சை உருக்கும் இந்த தந்தையின் செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.