நீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு!
நியூயார்க்: நீரில் மூழ்கும் நாயைக் காப்பாற்றிய அமெரிக்க போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. வாயில்லா ஜீவன்கள் எனக் குறிப்பிடப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் சொந்தம் தான். மனிதர்கள் சக மனிதர்களுக்கு தரும் முக்கியத்துவத்தைப் போலவே பேரிடர் சமயங்களில் இது போன்ற மற்ற பிராணிகளின் உயிருக்கும் மதிப்பு தர வேண்டும்.
வெள்ளம், மழை, புயல், தீ விபத்து போன்ற சமயங்களில் மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்றுவது போலவே, ஆபத்தில் சிக்கிக் கொண்ட நாய்கள், பூனைகள், மாடுகள் மற்றும் பறவைகள் போன்றவற்றையும் கருணை உள்ளம் கொண்டவர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளது.
தற்போதும் சமூகவலைதளங்களில் அது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 15 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நாய் ஒன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த போலீஸ்காரர் ஒருவர் கரையில் படுத்துக்கொண்டு, மிகவும் சிரமப்பட்டு அந்த நாயை தண்ணீர் இருந்து வெளியேற்றி காப்பாற்றுகிறார்.
இந்த சம்பவம் வட அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ஏரி பகுதியில் நிகழ்ந்துள்ளது. நாயை காப்பாற்றிய அந்த போலீஸ்காரரின் பெயர் ஜுவான் ஃபர்ரிஸ். இந்த வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் ஹீரோவாகிவிட்டார் மனிதர்.
நெட்டிசன்கள் பலரும் ஜுவான் ஃபர்ரிஸை பாராட்டி வருகின்றனர். 'வாயில்லா ஜீவனுக்காக இத்தனை சிரமப்பட்ட போலீஸ்காரர் நிச்சயம் ரியல் ஹீரோ தான்' என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜுவான் ஃபர்ரிஸ் வீடியோவுக்கு லைக்ஸ் மழை கொட்டுகிறது. பலரும் அந்த வீடியோவை தங்கள் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.