எமர்ஜென்சி திட்டம்.. 30 வருடங்களில் மிக மோசமான சரிவு.. வால் ஸ்டிரீட் படுத்தது.. அச்சத்தில் அமெரிக்கா
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் கடந்த 30 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் கடந்த 30 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி செல்வதாக அச்சம் எழுந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவ உலகம் எப்படி ஆடிப்போய் உள்ளதோ அதேபோல் பொருளாதாரமும் வணிகமும் உலகம் முழுக்க மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. வல்லரசு நாடுகள் எல்லாம் மிக மோசமான பொருளாதார சரிவை இதனால் சந்தித்து இருக்கிறது.
இந்தியாவில் நேற்றே 2500க்கும் அதிகமான புள்ளிகள் இதனால் சரிவை சந்தித்தது. இன்றும் பங்கு சந்தை சரிவோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக மார்க்கெட் சரிந்து வருகிறது.
டிரம்ப் சொன்னார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மார்க்கெட் சரிவை பெரிய அளவில் முதலில் கண்டுகொள்ளவில்லை. முதலில் கொரோனாவை அவர் பெரிய அச்சுறுத்தலாக நினைக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்கள் முன்பு, கொரோனா காரணமாக அமெரிக்க பொருளாதாரம் சரிய வாய்ப்புள்ளது. இதனால் பொருளாதாரம் பெரிய பாதிப்புகளை சந்திக்கலாம் என்று குறிப்பிட்டார்.
எமர்ஜென்சி நடவடிக்கை
அதோடு அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டில் இதற்காக எமர்ஜென்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 2008ல் உலகம் முழுக்க பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, அமெரிக்கா சில எமர்ஜென்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா அறிவித்தது. வரிகளை குறைப்பது, வங்கிகளின் அவசர வைப்பு நிதியை பயன்படுத்த அனுமதி தருவது என்று நிறைய எமர்ஜென்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஆனால் என்ன
ஆனால் இந்த நடவடிக்கை எதுவும் பலன் அளிக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் கடந்த 30 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி செல்வதாக அச்சம் எழுந்துள்ளது. ஆம் 1987க்கு பிறகு மிக மோசமான சரிவை அந்நாடு சந்தித்துள்ளது. இந்த சரிவு மேலும் தொடரும். அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக நிலைகுலைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
யார் எல்லாம் அதிகம்
அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக தி டோ ஜோன்ஸ் ஆவரேஜ் மொத்தம் 12.5% சரிந்தது. இது 3000 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் எஸ் அண்ட் பி 12% சரிந்தது. நாஷ்டாக் மொத்தமாக 12.3% புள்ளிகள் சரிந்தது. இதில் நாஷ்டாக் சரிவுதான் மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது. நாஷ்டாக் சரிவு உலகம் முழுக்க எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன மோசமாகும்
அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உலகம் முழுக்க எதிரொலிக்கும் என்கிறார்கள். கொரோனா அச்சம் போகும் வரை இந்த சரிவு இப்படித்தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். அதோடு ஆசிய நாடுகள் இந்த வைரஸ் காரணமாக இன்னும் மோசமான பொருளாதார சரிவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.