அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.. காஷ்மீர் குறித்து முதல்முறையாக வாயை திறந்த வெள்ளை மாளிகை
காஷ்மீரில் நேற்று நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து தற்போது வெள்ளை மாளிகை சார்பாக அதன் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: காஷ்மீரில் நேற்று நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து தற்போது வெள்ளை மாளிகை சார்பாக அதன் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அமெரிக்கா இன்னும் வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுபற்றி எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால் என்ன
இந்த நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பாக அதன் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான மார்கன் ஓர்டாகஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் நடக்கும் விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அங்கு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதும் . இரண்டாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டதும் தெரியும். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கவனித்து வருகிறோம்
அங்கு நடக்கும் விஷயங்களை வெள்ளை மாளிகையில் இருந்து கூர்மையாக கவனித்து வருகிறோம். அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது அங்கு யாராக இருந்தால் அமைதி காக்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறோம், என்று குறிப்பிட்டார்.
டிரம்ப்
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என்று குறிப்பிட்டார். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா பாகிஸ்தான் இடையே சமரசம் பேச நான் தயார் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்தியா இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா என்ன
அதேபோல் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டேர்ஸ், விளக்கம் அளித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் நடக்கும் மாற்றங்களை கவனித்து வருகிறோம். அங்கு எதும் பிரச்சனை ஏற்படாது என்று நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் இரண்டு தரப்பும் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றுள்ளார்.