அவர்கள் நினைத்தால் மாறும்.. இந்தியர்களை இம்ப்ரஸ் செய்ய துடிக்கும் டிரம்ப் - பைடன்.. என்ன காரணம்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களை கவர்வதற்காக மாறி மாறி இரண்டு முக்கிய கட்சிகளும், அதிபர் வேட்பாளர்களும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் நிமிடத்திற்கு நிமிடம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இதுவரை வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகள் அனைத்திலும் ஜோ பைடன் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். நாளுக்கு நாள் இவருக்கான ஆதரவு பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது.
இதயம் கனக்கிறது.. இனி எப்படி இருப்பேன்?.. சகோதரர் ராபர்ட் டிரம்ப் மரணம்.. அதிபர் டிரம்ப் உருக்கம்!
தேர்தல் வருகிறது
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்களை கவர்வதற்காக மாறி மாறி இரண்டு முக்கிய கட்சிகளும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஒரு பக்கம் ஜனநாயக கட்சி சார்பாக பைடன் இந்தியர்களுக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளார். இன்னொரு பக்கம் அதிபர் டிரம்ப் இந்தியர்களின் வாக்குகளை கவர குட்டி கரணம் அடித்துக் கொண்டு இருக்கிறார்.
டிரம்ப் எப்படி
டிரம்ப் கடந்த வருடத்தில் இருந்தே அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் வாக்குகளை கவர சரியான திட்டங்களை வகுத்து வருகிறார். இதற்காகத்தான் பிரதமர் மோடி தலைமையில் ஹவுஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை டிரம்ப் நடத்தினார் . வரலாறு காணாத இந்தியர்கள் கூட்டம் இதற்கு வந்தது. டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் பிரச்சாரமாக இது பார்க்கப்பட்டது.
சீனா மோதல்
அதன்பின் சீனாவுடனான இந்தியாவின் மோதலில் இந்தியாவிற்கு துணை நிற்போம் என்று டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக சீனாவை வெளிப்படையாக எதிர்க்க டிரம்ப் துணிந்தார். அதோடு இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்றும் டிரம்ப் அறிவித்தார். இது மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு எதிராகவும், நேபாளத்திற்கு எதிராகவும் டிரம்ப் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.
விசா எப்படி
முன்பு இவர் விதித்த எச்1 பி விசா தடை இந்தியர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது. இதனால் தற்போது எச்1 பி விசா தடையில் தளர்வுகளை கொண்டு வந்து உள்ளார். எச்1 பி விசா ஏற்கனவே உள்ளவர்கள், தங்கள் பழைய வேலையில் மீண்டும் சேர விரும்பினால் சேரலாம். இதற்கு தடை இல்லை. அவர்களின் மனைவி, குழந்தைகளும் விசா பெறுவதற்கான தடைகளை நீக்கினார். இந்தியர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் டிரம்ப் இப்படி பேசினார்.
மோடி எப்படி
இன்னொரு பக்கம் மோடி உடன் டிரம்ப் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். மோடியுடன் நெருக்கமாக இருந்தால் இந்தியர்கள் நம்மை விரும்புவார்கள். இதன் மூலம் இந்தியர்கள் நமக்கு வாக்களிப்பார்கள். இந்தியர்களை கவர்ந்து வாக்குகளை அள்ளலாம், என்று டிரம்ப் நினைக்கிறார். இன்னொரு பக்கம் பைடனும் இதையேதான் செய்கிறார்.
பைடன் எப்படி
பைடன் ஒரு படி மேலே போய், நேரடியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை தனது துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மூன்று நாட்கள் முன் பிரச்சாரத்தை தொடங்கிய கமலா ஹாரிஸ், தொடர்ந்து தனது இந்திய வம்சாவளி வரலாறு குறித்து பேசி வருகிறார். தனக்கு இட்லி மீது இருக்கும் காதல் குறித்தும், சென்னை நினைவுகள் குறித்தும் கமலா ஹாரிஸ் அடுத்தடுத்து பேசி வருகிறார். இந்தியர்களின் வாக்குகளை அள்ளும் பிரச்சார யுக்தி இது.
பைடன் பேட்டி
இந்த நிலையில்தான் ஜோ பைடன் நேற்று இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் , இந்திய அமெரிக்கர்கள் அனைவருக்கும் மற்றும் அமெரிக்காவில் இந்திய பூர்வீகத்தோடு வசிக்கும் நபர்களுக்கும் என்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்கள்.நமக்கு ஒரு நெருக்கமான பந்தம் இருக்கிறது. நான் அமெரிக்க செனட்டர் மற்றும் துணை அதிபராக இருந்த போது இந்த பந்தம் மற்றும் உறவு நெருக்கமானதை பார்த்து இருக்கிறேன்.
என்ன சொன்னார்
இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமான உறவுகளாக, நட்புகளாக மாறினால் உலகம் மொத்தமும் மாறும். உலக அமைதிக்கு அது வழிவகுக்கும். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நான் இந்த கொள்கையில் உறுதியாக இருப்பேன். அதேபோல் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் எல்லை பிரச்சனையில் நான் இந்தியாவுடன் எப்போதும் உடன் நிற்பேன். இந்தியாவிற்கு ஆறுதலாக இருப்பேன், என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், பைடனிடம் ஒரே ஒரு இந்தியர்தான் இருக்கிறார். ஆனால் என் பக்கம் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். என் பக்கம் நல்ல இந்தியர்கள் இருக்கிறார்கள். கமலா ஹாரிஸ் மோசமானவர். அவரின் அரசியல் பாதை மோசமானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று இந்தியர்களை கவரும் வகையில் மீண்டும் பேசினார்.
பைடன் என்ன சொன்னார்
டிரம்பின் தொடர் அறிவிப்புகளை மிஞ்சும் வகையில் பைடன் திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் என்கிறார்கள்.. அதன்படி இந்தியாவிற்கு ஐநா பாதுகாப்பு குழுவில் பைடன் நிரந்தர உறுப்பினர் பொறுப்பை பெற்றுத்தருவார் என்று கூறுகிறார்கள். பைடன் அதிபரானால், கண்டிப்பாக இந்தியாவிற்காக அவர் காய்களை நகர்த்தி இந்தியாவிற்கு யுஎன்எஸ்சி குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெற்றுத்தருவார். இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் பிடன் இந்த திட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.
ஏன் இப்படி
இதற்கு எல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய மாகாணம்தான் டெக்சாஸ் . இங்கு வெற்றிபெறாமல் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது. இங்கு இந்தியர்கள்தான் அதிக இருக்கிறார்கள். இவர்களின் வாக்குகளை கவர்ந்ததால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். இல்லையென்றால் அதிபர் தேர்தலில் தோல்விதான் மிஞ்சும்.
இதுதான் காரணம்
இதுதான் தற்போது இந்தியர்களை இம்ப்ரஸ் செய்ய இரண்டு பேரும் போட்டி போட்டு முயற்சி செய்ய காரணம். இந்தியர்களை கவர்வதன் மூலம் ஆப்ரோ அமெரிக்கர்கள், மெக்சிகோ மக்கள் ஆகியோரையும் கவர முடியும் என்று இவர்கள் இருவரும் நம்புகிறார்கள். இதன் மூலம் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று இரண்டு அதற் வேட்பாளர்களும் நம்புகிறார்கள்.