அமெரிக்கா போங்க! தென் கொரியாவில் பிடன் இருக்கும் போதே.. திருப்பி அனுப்பப்பட்ட சீக்ரெட் சர்வீஸ்! ஏன்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடன் தென் கொரியா சென்றுள்ள நிலையில் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு சென்ற சீக்ரெட் சர்வீஸ் படையின் இரண்டு முக்கிய அதிகாரிகள் மீண்டும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பிற்கு என்று சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த சீக்ரெட் சர்வீஸ்தான் அமெரிக்க அதிபரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும்.
கருப்பு கோட், கண்ணாடி, காதில் ஸ்பீக்கர் போன் என்று பார்க்கவே கெத்தாக வலம் வருவார்கள் இந்த சீக்ரெட் சர்வீஸ் படையினர். அதிபர் எங்கே சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளும் செல்வது வழக்கம்.
நீடிக்கும் போர்... ஜோ பிடன் உக்ரைன் செல்லும் திட்டமில்லை - கைவிரித்த வெள்ளை மாளிகை
தென்கொரியா பயணம்
இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்க அதிபர் பிடன் அமெரிக்காவில் இருந்து தென் கொரியாவிற்கு சென்றுள்ளார். நேற்று தென்கொரியாவிற்கு சென்ற அவர் அங்கு பல்வேறு சந்திப்புகளை நடத்த உள்ளார். அதேபோல் பல்வேறு ஒப்பந்தங்களை செய்ய இருக்கிறார். பாதுகாப்பு ரீதியான ஒப்பந்தங்கள் இதில் முக்கியத்துவம் பெற உள்ளது. மின்னணு சாதன உற்பத்தி தொடர்பான ஒப்பந்தங்களும் இதில் முக்கியத்துவம் பெற உள்ளது.
பிடன் பயணம்
இந்த நிலையில்தான் பொதுவாக அதிபர் வெளிநாட்டிற்கு செல்லும் முன் அந்த நாட்டிற்கு சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சென்று பாதுகாப்பு சோதனைகளை செய்வார்கள். பாதுகாப்பு ரீதியாக அதிபருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வார்கள். இதற்காக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சிலர் பிடன் தென் கொரியா செல்லும் முன்பே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். தென் கொரியாவில் அவர்கள் பல்வேறு சோதனைகளை செய்தனர்.
சீக்ரெட் சர்வீஸ்
இந்த நிலையில்தான் இரண்டு சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், தென்கொரியாவிற்கு சென்றுவிட்டு வேலைகளை கவனிக்காமல், அங்கு பாருக்கு சென்று குடித்து உள்ளனர். மூக்கு முட்ட குடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்த டாக்சி ஓட்டுனர் ஒருவரிடம் மோதலில் ஈடுபட்டு உள்ளனர். மிக மோசமாக டாக்சி ஓட்டுனரிடம் அவர்கள் சண்டை போட்டுள்ளார். இதை பற்றிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிண்டல்
ஆனால் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. போலீசார் இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பிடன் தங்க போகும் ஹோட்டலுக்கு வெளியேதான் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அந்த விஷயம் உடனே சீக்ரெட் சர்வீஸ் தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனே அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருப்பி அனுப்பினார்
நீங்கள் வெள்ளை மாளிகைக்கு போய் ரிப்போர்ட் செய்யுங்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு அவர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. தென்கொரிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை கடுமையாக கிண்டல் செய்து எழுதி வருகின்றன. அதிபரின் பாதுகாவலர்களே இப்படி இருக்கிறார்களே என்று கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.