ரகசிய ஆவணங்களை திருடிய டிரம்ப்? இனி மொத்த அரசியல் "கெரியருக்கே" ஆப்பு.. எப்பிஐ ரெய்டால் பரபரப்பு!
நியுயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புளோரிடா வீட்டில் எப்பிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்த ரெய்டு காரணமாக டிரம்ப்பின் அரசியல் எதிர்காலமே காலியாகும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக அமெரிக்காவில் ஒரு அதிபரின் ஆட்சி முடிந்ததும்.. புதிய அதிபர் பதவி ஏற்பார். இந்த பழைய அதிபர்களுக்கு பொதுவாக குறிப்பிட்ட இடைவெளியில் உளவுத்துறை தகவல்கள் சில அனுப்பப்படும். அதாவது அதிபர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும் சில தகவல்கள் முன்னாள் அதிபர்களுக்கும் தெரிவிக்கப்படும்.
முன்னாள் அதிபர்களின் ஆலோசனையை பெறவும், அவர்களுக்கு இதில் ஏற்கனவே ஏதாவது தகவல் தெரிந்தால் அந்த தகவலை புதிய அதிபருக்கு வழங்கவும் வகையிலும் இந்த உளவு தகவல்கள் வழங்கப்படும்.
தோனி வருகிறார்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா.. பிரம்மாண்டம்
உதாரணமாக அதிபர் பிடன் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு சில தீவிரவாதம் தொடர்பான உளவு தகவல்களை அவ்வப்போது அனுப்புவார். இதில் டிரம்பிற்கு ஏதாவது முன்பே தெரிந்து இருந்தால், நாட்டின் பாதுகாப்பை கருதி அவர் அரசுக்கு உதவலாம். ஆனால்.. இப்படிப்பட்ட உளவுத்தகவல்களை கூட பகிர மறுத்தவர்தான் டிரம்ப். தனக்கு முன்னாள் இருந்த அதிபர் ஒபாமாவிடம் டிரம்ப் அதிபராக இருந்த போது உளவுத்தகவல்களை பகிர மறுத்தார். இது பெரிய சர்ச்சையானது.
ரெய்டு எங்கே?
உளவுத்தகவல்களை முன்னாள் அதிபருக்கு கூட சொல்லாமல் ரகசியம் காத்த அதே டிரம்ப் தற்போது உளவு தகவல்களை திருடிய குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். ஆம் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் பதவிக்காலம் முடிந்த பின் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது பல்வேறு பாக்ஸ்களில் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்க அதிபர்கள் பதவிக்காலம் முடிந்ததும் தங்கள் ஆவணங்களை அரசின் காப்பகத்தில் ஒப்படைப்பார்கள்.
ரெய்டு ஏன்?
ஆனால் டிரம்ப் அப்படி செய்யாமல் பெரும்பாலான ஆவணங்களை தன்னுடைய சொந்த வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். மொத்தம் 15க்கும் மேற்பட்ட பாக்ஸ்களில் இவர் அதிபர் அலுவலக ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார். அதில் சில ஆவணங்கள் உளவு தகவல்கள், வெளியே வர கூடாத ரகசிய தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் டிரம்ப் தனது பண்ணை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். புளோரிடாவில் உள்ள Mar-a-Lago வீட்டிற்கு டிரம்ப் இந்த ஆவணங்களை எடுத்து சென்று இருக்கிறார்.
சிக்கல்
இதை அரசு ஆவண காப்பகம் பல முறை கேட்டும் டிரம்ப் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், அமெரிக்க நீதித்துறை இவரின் வீட்டை ரெய்டு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து எப்பிஐ மூலம் இவரின் வீடு ரெய்டு செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில் டிரம்ப் உள்ள நிலையில், புளோரிடாவில் உள்ள இவரின் பண்ணை வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அந்நாட்டு நீதித்துறை இவருக்கு எதிராக வாரண்ட் வழங்கி இந்த ரெய்டை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் வாரண்ட் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியிட கூடாது
எனவே டிரம்பிற்கு இது பெரிய சிக்கலாக மாறியுள்ளது. காரணம் டிரம்ப் ஆவணங்களை திருடியது உறுதியானால் அவர் அந்நாட்டு நீதிமன்ற விசாரணையில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார். அதோடு அரசின் ரகசிய ஆவணங்களை திருடியதாக கூறி இவர் அரசு பணிகளை செய்வதில் இருந்தும் தடையும் பெறுவார். அதாவது எந்த விதமான மேயர், எம்பி, அதிபர் போன்ற தேர்தல்களிலும் இவர் போட்டியிட முடியாது. அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் திட்டமிட்டு வரும் நிலையில்தான் இந்த ரெய்டு நடந்துள்ளது.
தூக்கப்பட்டது
டிரம்ப் வீட்டில் இருந்து பல பாக்ஸ்களில் நிறைய ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ரகசிய ஆவணம் இருந்தாலும் டிரம்பின் அரசியல் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டிரம்ப் தற்போது ரெய்டை விமர்சித்து புலம்பி வருகிறார். என்னுடைய வீட்டை கூறு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாள் அமெரிக்க வரலாற்றில் இருண்ட நாள். எந்த அதிகாரமும் இல்லாமல் என்னுடைய வீட்டை சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.