10 ஆண்டுகளாக கணவரின் சடலத்தை ப்ரீசரில் பாதுகாத்த மனைவி.. காரணம் தெரியாமல் போலீசார் குழப்பம்!
கணவரின் பிணத்தை 10 ஆண்டுகளாக ப்ரீசரில் வைத்து பாதுகாத்து வந்திருக்கிறார் வயதான பெண் ஒருவர்.
நியூயார்க்: இறந்து போன கணவரின் உடலை 10 ஆண்டுகளாக ப்ரீசரில் வைத்து அவரது மனைவி பாதுகாத்து வந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் உத்தா பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போலீசார் தங்களது வழக்கமான சோதனையை மேற்கொண்டு வந்தனர். வெகு நாட்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் சென்று பார்ப்பது அவர்களது வழக்கம்.
அதேபோல் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட ஒரு பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளரான ஜீன் சொரன் எனும் வயதான பெண்ணின் உயிரற்ற உடல் அங்கு கிடந்தது. அந்த உடலை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்திய போது, வயோதிகத்தின் காரணமாக அவர் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டை மேலும் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு ப்ரீசர் பெட்டியில் வயதான இறந்து போன அப்பெண்ணின் கணவர் பால் எட்வெர்ட்ஸ் மாத்தர்சின் சடலம் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சடலத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில், 'தனது சாவுக்கு மனைவி காரணமில்லை’ என மாத்தர்ஸ் கைப்பட எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பால் மாத்தர்ஸ் எழுதிய கடிதத்தில் டிசம்பர் 2, 2008 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை கடைசியாக 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஒரு மருத்துவமனையில் சிலர் பார்த்திருக்கிறார்கள். எனவே பால் மரணமடைந்து பத்தாண்டுகள் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏன் தனது கணவரின் உடலை இத்தனை ஆண்டுகள் அப்பெண் ப்ரீசரில் வைத்து பாதுகாத்து வந்தார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.