10.6 கோடி பேரின் தகவல்களை திருடிய கில்லாடி பெண்... கிரெடிட் கார்டு நிறுவனம் அதிர்ச்சி
நியூயார்க்: அமெரிக்காவில் 10.6 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2015 ம் ஆண்டு முதல் 2019 வரையிலான கிரெடிட் கார்டு விண்ணபித்தவர்களின், பெயர், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டன்-னைச் சேர்ந்த பெய்ஜ் தாம்சன் என்ற 33 வயது பெண்மணி ஒரு மென்பொறியாளர் ஆவார். இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10.6 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார்.
இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும் 'ஹிட்கப்' என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணைய தள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எஃப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரடிட் கார்டு கணக்கு விவரங்களையோ அதற்கான பாஸ்வேர்டுகளையோ பெய்ஜ் தாம்சன் திருடவில்லை.
திருடிய விவரங்களை பயன்படுத்தி நிதிமோசடியில் ஈடுபடவில்லை. இருப்பினும் தகவல் திருட்டுக்காக அவருக்கு 5 ஆண்டுவரை சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ள கேபிடல் ஒன் நிறுவனம், தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்காவில் கிரெடிட் கார்டு சேவை வழங்கும் மிகப் பெரிய நிறுவனம் கேபிடல் ஒன் என்பது குறிப்பிடத்தக்கது.