4000 வருடத்திற்கு முன் அழிந்து போனது..மீண்டு வரும் ஊழி மம்மத் யானை- குளோனிங்கில் உயிர்ப்பிக்க பிளான்
நியூயார்க்: 4000 ஆயிரம் வருடங்களுக்கு முன் அழிந்து போன ஐஸ் ஏஜ் யானை இனமான மம்மத் வகை யானைகளை மீண்டும் மீட்டு கொண்டு வரும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர். இதற்கான ஆராய்ச்சிகளை அவர்கள் மூன்று லேப்களில் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக புதிய நிறுவனம் ஒன்றையும் அவர்கள் தொடங்கி உள்ளனர்.
கொலஸ்ஸல் (Colossal) என்று பெயரிடப்பட்டு இருக்கும் அந்த நிறுவனம் அழிந்து போன ஐஸ் ஏஜ் யானைகளை மீட்டு கொண்டு வர ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறது. இதற்காக அந்த நிறுவனம் இதுவரை 15 மில்லியன் டாலர் நிதியை பெற்று இருக்கிறது. இன்னும் பல நிறுவனங்கள் இவர்களுக்கு நிதி கொடுக்கும் திட்டத்திலும் இருக்கிறார்கள்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் சர்ச் என்பவரின் முன்னெடுப்பின் மூலம் இந்த ஆராய்ச்சி நடக்கிறது. பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், ஜீன் வல்லுனர்கள் மூலம் இந்த ஆராய்ச்சி தொடங்கி உள்ளது. மொத்தமாக இந்த ஆராய்ச்சி நடந்து முடிய பல வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மம்மத் யானை என்றால் என்ன?
மம்மத் யானை என்பது ஆர்டிக் பகுதியில் வாழ்ந்த யானைகள் ஆகும். 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் பூமியில் அதிக அளவில் காணப்பட்ட யானைகள் ஆகும். இந்த யானைகளின் அழிவை தொடர்ந்தே பூமியில் வெப்பநிலை உயர்ந்து, ஒரு வகையில் அது மீன்கள், பின்னர் மனிதர்களின் தோற்றத்திற்கும் காரணமாக இருந்தது. கடந்த 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கூட ஒரு சில மம்மத் யானைகள் செர்பியா அருகே வாழ்ந்து வந்து இருக்கின்றன. ஊழி மம்மத் யானை என்று இதை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அதாவது கம்பிளி போர்த்திய உடல் கொண்ட யானைகள் என்று கூறுவார்கள். 14 அடி முதல் 18 அடி வரை உயரம் கொண்டதாக இந்த யானைகள் இருந்துள்ளன. நீண்ட தந்தங்கள் கொண்டு இருந்துள்ளன.
மீண்டு வரும் மம்மத்?
இந்த யானை குறித்து அமெரிக்காவில் உள்ள டாக்டர்கள் சர்ச் ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்ய உள்ளனர். மம்மத் யானைகளின் படிமங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன் டிஎன்ஏவை லேசாக மாற்றம் செய்து தற்போது இருக்கும் யானைகளின் கருவில் இருந்து யானை வளரும் முன் எம்பிரியோவை எடுத்து, அதில் இந்த ஜீன்களை செலுத்தி, புதிய வகை கருவை செயற்கையாக உருவாக்கி, பின்னர் அதை லேபில் வளர வைத்து மம்மத் யானைகளை மீட்டு எடுக்க உள்ளனர். அதாவது டெஸ்ட் டியூப் யானையை உருவாக்க உள்ளனர். அதில் மம்மத் யானையின் டிஎன்ஏவை செலுத்தி மொத்தமாக யானையை லேபில் வளர்க்க உள்ளனர்.
ஆசிய யானைகளின் ஒற்றுமை
ஆசிய யானைகளும் மம்மத் யானைகளும் பெரிய அளவில் நெருக்கம் கொண்டது. இதன் இரண்டு டிஎன்ஏக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றம் கொண்டது. இதனால் ஆசிய யானைகளின் எம்பிரியோ வளரும் முன் அதில் ஜீன் மாற்றங்களை மேற்கொண்டு இந்த மம்மத் யானைகளை உருவாக்க முடியும். இரண்டு யானை வகைகளின் பாட்டன்கள் ஒரே யானைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிய யானையை வைத்து அதன் பங்காளி மம்மத் யானைகளை மீட்டு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
எப்படி?
இப்போது லேபிள் மம்மத் யானைகளை உருவாக்கி, பின் அதை கருவுற செய்து முழுக்க முழுக்க புதிய மம்மத் யானை எம்பிரியோவை உருவாக்க முடியும். இதன் மூலம் மம்மத் யானைகள் பலவற்றை உருவாக்கி அதன் இனத்தையே தோற்றுவிக்க முடியும் என்று டாக்டர் சர்ச் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜீன் எடிட்டிங் முறைகளில் ஒன்றான CRISPR-Cas9 என்ற முறை மூலம் தற்போது உள்ள யானைகளின் டிஎன்ஏ ஜீன்களை எடிட் செய்து மம்மத் யானைகளை உருவாக்க போகிறார்கள். இதற்கு இப்போதே மம்மபாண்ட் என்று பெயர் வைத்து விட்டனர். அழிந்து போன மம்மத் யானை போலவே இது தோற்றம், பண்பு அனைத்திலும் ஒரே மாதிரி இருக்கும்.
பழைய உயிரினம்
2013ல் இந்த மம்மத் யானைகளின் டிஎன்ஏ செர்பியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்டுபிக்கப்பட்டது. ஆர்டிக் பகுதிகள் பலவற்றில் இருந்து இதன் சிதிலமடைந்த உடல்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸில் இருப்பதால் பல மம்மத் யானைகளின் பாகங்கள் அப்படியே இருந்துள்ளது. இதில் இருந்துதான் தற்போது டிஎன்ஏவை எடுத்துள்ளனர். இதனால் மொத்த உலகமும் மாறும். வானிலை சரியாகும். வெப்பநிலை குறையும். ஆர்டிக் பகுதிகளில் மீண்டும் வானிலை சமநிலையை ஏற்படுத்த மம்மத் யானைகள் உதவும், வானிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் அதை தடுக்க இது உதவும் என்று இந்த ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
கேள்விகள்
ஆனால் அதே சமயம் இயற்கை ஆர்வலர்கள் பலர் இதை எதிர்த்து உள்ளனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளனர். இது இயற்கைக்கு எதிரானது. சமநிலையை பாதிக்க கூடியது. நாம் மம்மத் யானைகளுடன் வாழ முடியுமா என்பது சந்தேகம். அந்த யானைகள் புதிய வெப்பநிலையில் வாழுமா என்பதும் சந்தேகம். இயற்கையை மீறி இப்படி ஒரு ஆராய்ச்சி செய்வதை ஏற்க முடியாது. ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மனித குலத்திற்கு எதிராக சென்றுள்ளது. அந்த யானையை பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் அதை மீண்டும் மீட்டு கொண்டு வர நினைக்க கூடாது, என்று எச்சரித்துள்ளனர்.