மனித பேரவலம் நீடிப்பு: உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியது- பலி 1,75,759 ஆக உயர்வு
நியூயார்க்: உலகின் பேரவலமாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் 25 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,75,759 ஆகவும் அதிகரித்துள்ளது.
Recommended Video
கடந்த சில மாதங்களாக மனித குலத்தை நரவேட்டையாடி வருகிறது கொரோனா தொற்று நோய். ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் இயக்கத்தையே நிலைகுலைய வைத்து முடக்கி உள்ளது கொரோனா.
உலகின் செல்வந்த நாடுகள், அறிவுசார்ந்த நாடுகள் என்ற தற்பெருமை தேசங்களில் மரண ஓலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் உலக நாடுகளில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது இந்த எண்ணிக்கை 25,36,673 ஆகும்.
கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட கேரளாவின் காசர்கோடு- இந்தியாவுக்கே வழிகாட்டி
பேரழிவில் அமெரிக்கா
சீனாவில்தான் கொரோனாவின் தாக்கம் தொடங்கியது என்றாலும் அமெரிக்காதான் மிகப் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் மாண்டு வருகின்றனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1,481 பலியானதால் அங்கு மொத்த உயிரிழப்பு 43,995 ஆக உயர்ந்திருக்கிறது.
ஸ்பெயின், பிரான்ஸ்
அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் ஒரே நாளில் 534 பேரும் பிரான்ஸில் 531 பேரும் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக இத்தாலியில் 24,648 பேரும் ஸ்பெயினில் 21,282 பேரும் உயிரிழந்து போயுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 430 பேர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,796 ஆகும்.
இங்கிலாந்தில் உக்கிரம்
இங்கிலாந்திலும் கொரோனாவின் ருத்ரதாண்டவம் நீடிக்கிறது. இங்கு ஒரே நாளில் 828 பேர் மரணித்துப் போயிருக்கின்றனர். கொரோனாவால் இங்கிலாந்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 17,337 ஆக உயர்ந்திருக்கிறது. ஈரானில் 5,297 பேரும் ஜெர்மனியில் 4,948 பேரும் பலியாகி உள்ளனர். கொரோனா தொடங்கிய சீனாவில் இதுவரை மொத்தம் 4,632 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் 8 லட்சம் பேர்
அமெரிக்காவில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8, 04,759 என அதிகரித்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக ஸ்பெயினில் 2, 04,178; இத்தாலியில் 1.83,957; பிரான்ஸில் 1,58,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 1,48,024 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.