இந்தியாவிற்கு ஏன் ஸ்பெஷல் சலுகை.. நிறுத்துங்கள்.. சர்வதேச அரங்கில் டிரம்ப் கோரிக்கை.. ஏன் கோபம்?
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உலக வர்த்தகத்தில் அதிக முக்கியத்துவம், சலுகைகள் தரப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்: இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உலக வர்த்தகத்தில் அதிக முக்கியத்துவம், சலுகைகள் தரப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது எப்படி பேசுவார், என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. வடகொரியா உடன் சண்டை போட்டவர், திடீர் என்று கிம் ஜோங் உன் உடன் சமாதானமாகி சென்றார். அதேபோல் சீனாவுடன் கடந்த வருடம் முழுக்க அமெரிக்கா வர்த்தக போரில் ஈடுபட்டது.
ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுடன் அமெரிக்கா சமாதானமாக சென்றது. அதோடு, சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால் தற்போது சீனாவையும் இந்தியாவையும் அதிபர் டிரம்ப் வேறு விதமாக எதிர்க்க தொடங்கி உள்ளார்.
என்ன மாநாடு
சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தியா மற்றும் சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்தியா மற்றும் சீனாவிற்கு அளிக்கப்படும் வரி சலுகைகளை உலக வர்த்தக அமைப்பு நிறுத்த வேண்டும். உலக வர்த்தக அமைப்பானது இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுக்கு வளரும் நாடுகள் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. இந்த வளரும் நாடுகள் டேக்கை பெற்ற நாடுகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.
எப்படி முக்கியம்
முக்கியமாக வரி சலுகை, எளிதான வியாபார விதிமுறை, தொழில், முதலீட்டு விதிமுறைகள் எளிதாக இருக்கும். உலக வர்த்தக அமைப்பு சீனா, இந்தியாவிற்கு இப்படி சலுகை வழங்க கூடாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா, இந்தியா இரண்டும் வளரும் நாடுகள் அல்ல. அவை வளர்ந்த நாடுகள். அவர்களுக்கு இனியும் சலுகை வழங்க கூடாது.இந்தியா, சீனாவால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது. இனியும் இந்தியா சீனாவை சலுகைகளை அனுபவிக்க விட மாட்டேன்.
தரக்கூடாது
இந்த சலுகை முறைக்கு விரைவில் சரியான முடிவு கொண்டு வரப்படும். இரண்டு நாடுகளும் ஏற்கனவே முன்னேறிவிட்டார்கள். ஆனால் அமெரிக்கா பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நாங்கள் மோசமான நிலையில் இருக்கிறோம். உலக வர்த்தக நிறுவனம் எங்களுக்குத்தான் சிறப்பு சலுகைகளை அளிக்க வேண்டும். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சலுகைகளை அளிக்க கூடாது என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.
சண்டை நடக்கிறது
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த சில வாரங்களாக வர்த்தக ரீதியாக சண்டை நடந்து வருகிறது. இந்தியா சீனா இரண்டு நாடுகளும் அதிக அளவில் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா மற்றும் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். இதனால் ஏற்பட்ட கோபம்தான் அவரை இப்படி பேச வைத்துள்ளது என்கிறார்கள்.