பரவும் சோம்பி ஃபயர்.. பலநூறு இடங்களில் ஒரே நாளில் தீ.. நிலைகுலைந்த அமெரிக்கா, ரஷ்யா..எப்படி நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவிலும் ஆர்டிக் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. ரஷ்யாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு மிக மோசமான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவில் தற்போது மூன்று மிகப்பெரிய மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரீகான், கலிபோர்னியா,வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 12 நாட்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
லேசாக தொடங்கிய காட்டுத் தீ தற்போது நினைத்து பார்க்க முடியாத வேகம் எடுத்துள்ளது. எப்போதும் கலிபோர்னியாவில் ஏற்படுவது போல இல்லாமல் மிக மோசமான அளவில் இந்த முறை அங்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க காட்டுத் தீ.. வாழ்க்கையே இதை நம்பித்தான் இருக்கிறது.. ஒபாமா உருக்கம்..டிரம்பிற்கு நெருக்கடி
சேதம் எவ்வளவு
இந்த காட்டுத் தீ காரணமாக 34 லட்சம் ஏக்கர் நிலம் சேதம் அடைந்து உள்ளது. காட்டுப்பகுதி மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதியும் இதனால் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. 20 ஆயிரம் மக்கள் இதுவரை இதனால் இடம்மாறி இருக்கிறார்கள். 8க்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் மொத்தமாக தங்கள் இடங்களை காலி செய்து உள்ளனர்.
காலி செய்தனர்
அதிலும் ஒரீகான் பகுதியில் மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, ஒரீகான் , வாஷிங்க்டன் ஆகிய மூன்று மாகாணங்களில் சேர்த்து 100க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. மிக மோசமான வெப்ப காற்றும் இங்கு வீசி வருகிறது. இங்கு நிமிடத்திற்கு நிமிடம் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
எவ்வளவு வேகம்
தற்போது இந்த காட்டுத் தீ 45 கிமீ வேகத்தில் பரவி வருகிறது. இன்னும் பல நாட்களுக்கு இந்த காட்டுத் தீ நீடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீக்கு காலநிலை மாற்றம் காரணம் என்கிறார்கள். அங்கு வெப்பநிலை அதிகரித்த காரணத்தால் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதே காலநிலை மாற்றத்தால் ரஷ்யாவில் கடந்த ஜூன் மாதத்தில் இந்த இப்போது வரை தீவிரமாக காட்டுத் தீ பரவி வருகிறது.
ரஷ்யா எப்படி
ரஷ்யாவில் இருக்கும் பெரும்பாலான நகரங்கள், சைபீரியா, கிரீன்லாந்து, இந்த பக்கம் உள்ள கனடா, ரஷ்யாவின் சபாய்கால்சி கிராய், க்ராஸ்நோயார்க் கிராய்,சாகா ரீபப்ளிக் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 15 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வேகமாக இங்கு காட்டுத் தீ பரவி வருகிறது. ஆனால் இதை இன்னும் அணைக்க முடியவில்லை.
சோம்பி தீ
ரஷ்யாவில் பரவும் இந்த காட்டுத் தீயை சோம்பி பயர் என்று அழைக்கிறார்கள். அதாவது ''மிருதன் தீ'' என்று தமிழில் அழைக்காலம். காலநிலை மாற்றம் காரணம் இந்த தீ ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட ஆர்டிக் பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) நிலப்பகுதி காணப்படும். இங்குதான் இந்த தீ ஏற்பட்டுள்ளது. பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) என்பது பூமியில் பல இடங்களில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு வகை ஆகும்.
எப்படி இருக்கும்
இது சாதாரண நிலம் கிடையாது. இதன் அடிப்பகுதியில் ஐஸ் கட்டிகள் இருக்கும். இதன் அடிப்பகுதி மொத்தமாக உறைந்து, நிரந்தரமாக உருகாமல் இருக்கும் ஐஸ் கட்டி பகுதியாக மாறி இருக்கும்.அதாவது பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) பகுதிகள் பல லட்சம் வருடங்களுக்கு முன் உருவானது. மொத்தம் இந்த பூமியில் 22% நிலப்பரப்பு பெர்மாஃப்ரோஸ்ட் (permafrost) நிலப்பரப்புதான். பூமியின் வெப்பநிலை உயர்ந்தால் இந்த பெர்மாஃப்ரோஸ்ட் உருகி குலைந்து நீராக மாறும்.
வாயு ஏற்படும்
அப்படி உருகும் சமயங்களில் பெர்மாஃப்ரோஸ்ட் உள்ளே இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயு, மீத்தேன் கேஸ் வெளியே வரும். இது வெளியே வந்த உடன் அருகில் இருக்கும் பெர்மாஃப்ரோஸ்ட் பற்றிக்கொண்டு அப்படியே சங்கிலி விளைவு போல தீ பிடிக்கும். பூமிக்கு கீழே நிலப்பரப்பில் தீ ஏற்படும். இதனால் உடனே பெர்மாஃப்ரோஸ்ட் மூலம் மேல் பகுதியிலும் காட்டுத் தீ பரவும். பூமிக்கு மேலேயும் , நிலத்திற்கு அடியிலும் காட்டுத் தீ பரவும். இதுதான் சோம்பி பயர்.
மிக மோசம்
இந்த காட்டுத் தீயை அணைப்பது கஷ்டம். பல மாதங்கள் விடாமல் இது வேகமாக பரவும். நிலத்திற்கு மேலே இதை அணைத்தாலும் உள்ளே இதை அணைக்க முடியாது. இதனால்தான் ரஷ்யாவில் இந்த காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அமெரிக்க காட்டுத் தீக்கும் இது காரணமாக இருக்குமா என்று அஞ்சப்படுகிறது . ஒரே நேரத்தில் ரஷ்யா, அமெரிக்கா என்று இரண்டு வல்லரசு நாடுகளில் இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.. இரண்டுக்குமே காலநிலை மாற்றம்தான் காரணம் என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.