நீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு
Recommended Video
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருவதால் பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாள்காக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் குந்தாவில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் விழுந்து மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஊட்டி கூடலூரை இணைக்கும் முக்கிய சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி- கூடலூர் இடையே அனுபாபுரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை உள்ளது. அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை மொத்தமும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனிடையே ஊட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கூடலூர் அருகே வேடன்வயல் பகுதிகளில் வாழை தோட்டத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. நீலகிரி மாவட்டடம் முழுவதும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மக்கள் நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் இன்றுடன் கடந்த 4 நாள்களாக பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82 செ.மீ மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு நீர்வரத்து 38 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.