நீலகிரி அருகே தண்ணீரில் மூழ்கடித்து 4 வயது சிறுமியை கொன்ற தாய் கைது.. போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்
நீலகிரி: கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நான்கரை வயது சிறுமியை அவரது தாயே படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா (32). இவர்களுடைய மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (நான்கரை வயது).
பிரபாகரன் அதே பகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
போலீஸில் புகார்
கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரபாகரன் திடீரென இறந்துவிட்டார். இதனால் சஜிதா, மனோஜ் வீட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முதல் தனது இளைய மகள் ஸ்ரீவர்ஷினியை காணவில்லை என கோத்தகிரி போலீஸில் புகார் அளித்தார்.
பங்களா அருகே தேடல்
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர், அப்போது சஜிதாவின் வீடு உள்ள எம்.கைகாட்டி பகுதியில் சிறுமியை தேடினர். அங்கு அவர் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா அருகே தேடினர்.
மிதந்த பொம்மை
அப்போது அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை போலீஸார் திறந்து பார்த்த போது அங்கு ஒரு பொம்மை தண்ணீரில் கிடந்தது. அந்த பொம்மை ஸ்ரீவர்ஷினியுடையது என அவரது சகோதரி சுபாஷினி உறுதி செய்தார்.
20 மீட்டர் தொலைவில்
இதையடுத்து அப்பகுதி மக்களின் உதவியுடன் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சிறுமியின் உடலை போலீஸார் மீட்டனர். சிறுமியின் வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தண்ணீர் தொட்டி உள்ளது.
மூடி
அந்த தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த இரும்பு மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தாய் மீது சந்தேகம்
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெற்ற குழந்தையே தாயை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
வாக்குமூலம்
இதையடுத்து போலீஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்றதை சஜிதா ஒப்புக் கொண்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் வறுமையால் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
பரபரப்பு
இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வறுமைக்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.