நீலகிரியில் ஒரே நாளில் 6 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன... மாணவர்கள் அதிர்ச்சி
நீலகிரி : குறைவான மாணவர்கள் உள்ளதாக கூறி இன்று ஒரே நாளில் நீலகிரியில் மொத்தம் 6 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. மூடப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த 4 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 பள்ளிகளை முன்னறிவிப்பின்றி கல்வித்துறை அதிகாரிகள் மூடினர். இதனால், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர் போன்ற ஏழை எளிய மக்கள் வாழும் பகுதி மாவட்டம் ஆகும். இங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி அவர்களின் குழந்தைகள் படிக்க ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் உதகை அடுத்த தங்காடு , கெத்தை , டி.ஒரநள்ளி ,காந்திபுரம் ,பெருபன்னை உட்பட 6 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருவதால் முன்னறிவிப்பின்றி கல்வித்துறை அதிகாரிகள் 6 பள்ளிகளை மூடியுள்ளனர். மேலும் 13 பள்ளிகளை மூட நீலகிரி மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிராமப் பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம். மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
தற்போது சுமார், 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும் என்று ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தநிலையில், நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிகள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து உரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.