ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கறாங்க... ஆ.ராசா தகவல்
குன்னூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆ.ராசா கலந்து கொண்டார்.
குன்னூர்: "ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கறாங்க... ஒரு நாளைக்கு டாஸ்மாக்கில் மட்டும் ரூ.80 கோடி லஞ்சமாக கிடைக்குது. இது அப்படியே மது சாப்பிட்றவங்க தலையிலதான் விழுது" என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
ஊட்டி அடுத்த இத்தலார் என்ற கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
"தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளோ அல்லது தலைவர்களோ நிர்ணயிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் எங்கே திமுக வெற்றி பெற்று விடுமோ என்று நினைத்து அதிமுக அரசு இன்னும் நடத்தாமல் உள்ளது. இதனால், நிறைய பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவே முடியாத நிலைமை இருக்கிறது.
டாஸ்மாக்கை பொறுத்தவரையில், ஒரு பாட்டிலுக்கு ரூ.20 எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 3 கோடி மது பாட்டில் மது விற்பனை ஆகிறது. அதன் மூலமாக, ரூ.80 கோடி லஞ்சமாகவும் கிடைக்குது. இந்த தொகை முழுசுமாக மது அருந்துபவர்களின் தலையில்தான் வந்து விழுகிறது.
வருஷத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்னார் மோடி. வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகமாகி உள்ளது. லஞ்சம், ஊழல் என மாநிலத்தில் ஆட்சி நடக்குது. பிரயோஜனமே இல்லாத ஆட்சி மத்தியில் நடக்கிறது. வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.