ஊட்டியில் விபரீதம்.. 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்த தம்பதி.. படுகாயத்துடன் மீட்பு
பைக்கில் இருந்து 100 அடி பள்ளத்தில் தம்பதி விழுந்து படுகாயமடைந்தனர்.
ஊட்டி: ஊட்டிக்கு டூருக்கு வந்த தம்பதி பைக்கோடு பாய்ந்து 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்டனர்.
கோவை வடவள்ளியை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ் - ஹேமா. இவர்கள் நேற்று காலை ஊட்டியை சுற்றிப் பார்க்க பைக்கில் கிளம்பினர்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இந்த தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெங்கடேஷ் எதிரே ஒரு வாகனம் வந்தது.
100 அடி பள்ளம்
அந்த வாகனத்திற்கு வழி விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்து தனது பைக்கை லேசாக திருப்பினார். அப்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் 100 அடி பள்ளத்துக்குள் தம்பதி பைக்கோடு பாய்ந்து விழுந்தனர். இதில் இருவருமே பலத்த காயமடைந்து அலறினார்கள்.
அலறல் சத்தம்
அந்த வழியாக சென்றவர்கள் பள்ளத்துக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் எட்டி பார்த்தபோது, கணவன்- மனைவி இருவரும் நிறைய காயங்களுடன் உயிருக்கு போராடியதை கண்டனர். இதை பார்த்து பதறிய பொதுமக்கள், வெலிங்டன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை தந்தார்கள்.
கயிறு கட்டி இழுத்தனர்
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், பள்ளத்துக்குள் விழுந்து கிடந்த தம்பதியை கயிறு கட்டி போராடி மீட்டனர். உடனடியாக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தம்பதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இந்த விபத்து சம்பந்தமான விசாரணையை தற்போது நடைபெற்று வருகிறது. கயிறு கட்டி தம்பதியை இழுக்கும் முயற்சியால் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.