ஆட்சியை காப்பாற்றி கொள்ள எதை செய்யவும் அதிமுக தயாராகி விட்டது.. ஜி.ராமகிருஷ்ணன் சாடல்
உதகை: மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிகார வரம்பை மீறிய செயல் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
உதகையில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சபாநாயகர் தனது அதிகாரத்தை மீறி 3 சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே, அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆட்சிக்கு ஆபத்து என்ற நிலையால் தான் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஆட்சியை கப்பாற்றி கொள்ள எதை செய்யவும் அதிமுக தயாராகி விட்டதையே இது காட்டுகிறது.மே 23-ம் தேதி வெளியாகும் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.
எந்த எல்லைக்கும் அதிமுக போகும்.. சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
மேலும் பேசிய ராமகிருஷ்ணன் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த கூடாது என்றார், இந்தியாவின் 10 சதவீத எண்ணெய் தேவையை ஈரான் நாடுதான் பெருமளவு பூர்த்தி செய்கிறது. இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் அந்நாட்டிடமிருந்து கிடைக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நம் நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கும் சூழல் உருவாகும் என குறிப்பிட்டார்