நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலி
நீலகிரி: நீலகிரி அருகே இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Recommended Video
கோவை சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்தனர்.
பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்தில் சிக்கியது. ஊட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காட்டேரி மலை முகட்டில் மஞ்சப்பா சத்திரம் பகுதியில் முற்பகல் 11.20 மணிக்கு விபத்து நிகழ்ந்தது.
ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.