ஊட்டியில் விடுதிகள் கொரோனா விதியை கடைபிடிக்கணும்..இல்லைனா 'சீல்' வைக்கப்படும்... கலெக்டர் வார்னிங்!
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத தனியார் காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இன்னசென்ட் திவ்யா குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
பொங்கல் விழா
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் துறை சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை கண்டு ரசித்தனர.
குடும்பத்துடன் கொண்டாடினார்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
அதிகம் பேர் வருவர்
பின்னர் நிருபர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவைக் கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகமானது பொங்கல் விழாவை கொண்டாடும் அதன் ஒரு பகுதியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும்.
விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது வரை இருந்து வரும் நிலையில் இங்கு வரும் பயணிகள் கட்டாய முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உள்ளூர் வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் அங்கு இந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை எடுத்துரைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.